23. தீயினிலே வளர் சோதி
வள்ளலார் என்று நாமறிந்த ராமலிங்க அடிகளை ஒரு வகையில் எதிர் புத்தர் என்று சொல்ல இயலும். இருவரது தேடலின் வழிகள் வேறு வேறு என்றாலும் விளைவு ஒன்று. கண்டடைந்தது ஒன்று. இருவரும் பயன்படுத்திய கருவியும் ஒன்றே. அறிவின் துணை கொண்டு மட்டுமே தமது தேடலின் விளைவைப் பகுப்பாய்வு செய்தவர்கள். ஒரே வித்தியாசம், அவர் கடவுளே இல்லை என்று சொன்னார். இவர் எல்லா உயிர்களும் கடவுளின் அம்சமே என்று சொன்னார்.
அதனால்தான் உணர்ச்சி மிக்க பாக்களால் கடவுளைப் போற்றிப் புகழ்ந்த சமயக் குரவர்களோடும் ஆழ்வார்களோடும் அவரைச் சேர்த்து அமரவைக்க முடிவதில்லை.
அவர் முருகனைத் துதித்தார். மாணிக்கவாசகரைத் தமது தொடக்க கால வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறார். ஆயினும் தன்னறிவு தெளிந்த பின்பு மதம் உள்ளிட்ட அனைத்துச் சட்டகங்களுமே உள்ளொளியை எட்டிப்பிடிக்க இடைஞ்சல் என்று கருதினார். அந்த உள்ளொளியைத்தான் அவர் அருட்பெரும் ஜோதி என்று வர்ணித்தார்.
டி ராஜேந்தர் படங்களில் இதயமே என்று பாடலில் ஒரு வரி வந்தால் உடனே ஆளுயர இதய பொம்மையைக் காட்டிவிடுவார் அல்லவா? நம் மக்களுக்கு அதுதான் வசதி. எதையும் காட்சி ரூபமாகப் பார்த்துப் புரிந்துகொள்வது. இதனைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலார் உணர்ந்திருக்கிறார்.
என்ன கெட்டுவிட்டது? ஏற்று ஒரு ஜோதியை! தமிழ்நாட்டில் ஜோதி வழிபாடு என்ற ஒன்று தோன்றியது அப்படித்தான். இதனைப் பிறகு விரிவாகப் பார்க்கலாம். வள்ளலாரைச் சிறிது அணுகி ஆராய வேண்டிய கட்டம் இது.
Add Comment