24. ரயிலுக்கு நேரமாச்சு
1854இல் மலைப் போக்குவரத்து பற்றிய ஆய்வு நடந்தபோதே முதலில் சாலை மார்க்கத்தை விட ரயில் வழி ஒன்றை அமைப்பது பற்றித்தான் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அப்போது ஆரம்பக்கட்டத்திலேயே அதன் பெரும் பொருட்செலவையும், எதிர்கொள்ள வேண்டிய ஆபத்துகளையும் எண்ணி அந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.
போக, அந்தத் திட்டங்கள் எல்லாமே குன்னூரிலிருந்து ஊட்டிக்குப் போடப்பட்டவையாகவே இருந்தன. கோயம்புத்தூரிலிருந்தோ மேட்டுப்பாளையத்திலிருந்தோ மலைக்கு ரயில் என்பது பற்றிய யோசனை கூட யாருக்கும் வரவில்லை. காரணம். மிகுந்த சரிவான மலைப்பாதையில் ஒரு ரயில் ஏறிச்செல்வது என்பதை யாராலும் அப்போது நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. குன்னூர் மலைப்பாதை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின்னர், மீண்டும் ரயில் பாதை அமைப்பது பற்றிய யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
1876, ரீகன்பேக் (Riggenbach) என்கிற சுவிட்சர்லாந்துப் பொறியாளர் புதிய ரயில்வே திட்டத்தை முன்வைத்தார். இவர்தான் முதன்முதலில் பற்சக்கர ரயில் பாதையை அமைத்துச்செயல்படுத்தியவர். 1860களில் சுவிட்சர்லாந்தில் லார்சென் ஏரியை ஒட்டி ரிகி (Rigi) என்கிற மலைக்கு ஒரு சுற்றுலா ரயில் விடுவதற்காகப் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மலையின் சாய்மானத்துக்கு ஏற்றவாறு ரயிலை மேலே ஏற்றுவதற்கான திட்டங்கள் பலவற்றில் ஓட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு, எல்லாமே ஒதுக்கிவைக்கப்பட்டன.















Add Comment