Home » ஆபிஸ் – 103
இலக்கியம் நாவல்

ஆபிஸ் – 103

103 சந்திப்புகள்

அம்பையை நேரில் தெரிந்த, சந்தித்தேயிருக்காத எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மூலம் கேள்விப்பட்டதிலிருந்து, அவர் ரொம்ப வித்தியாசமானவர் என்கிற சித்திரம் இவனுக்குள் உருவாகியிருந்தது. அவர் தமிழ்நாட்டிலேயே இல்லை; டெல்லி பாம்பே என்று இருப்பவர் என்பதால் எழுத்திலிருந்து உருவான பிம்பம், பெண்ணாகவும் வேறு இருப்பதால் அவரவர் மனதிற்கு உகந்தவிதமாக ஊதிப் பெருக்கிக்கொண்டதும் வேறு சேர்ந்துகொள்ளக் கிட்டத்தட்ட அம்பை என்கிற பெயரே கவர்ச்சிகரமாக மாறிவிட்டிருந்தது. அது அதுவரை தொடப்படாத, பெண்களுக்கே உரிய பிரத்தியேக விஷயத்தைத் தொட்ட, ‘அம்மா ஒரு கொலைசெய்தாள்’ கதையை வைத்து மட்டுமின்றி, இப்படி ஒரு பெண் நமக்குக் கிடைக்கமாட்டாளா என்ற உள்ளார்ந்த ஏக்கத்தின் விளைவாகவும் இருக்கலாம். சிறுபத்திரிகை வட்டாரத்தில் இருந்த ஒரே பெண் என்பதால் அநேகமாக எல்லோருமே மானசீகமாக அவரைக் காதலித்திருக்கவேண்டும் என்று இவனுக்குத் தோன்றியது.

கடந்த வருடம் ஈரோடிலிருந்து வந்தபின் அம்பையை முதல் முதலில் சந்தித்தது, சஃபையர் பெட்ரோல் பங்கிற்கு எதிரில் இருந்த சப்வே அருகில்தான். அடுத்திருந்த ஃபில்ம் சேம்பருக்கு முன்னால் இருந்த டீக்கடையில் டீ குடித்தபின் இவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு அவரிடம் ஒன்றை நீட்ட, வேண்டாம் என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு ரொம்ப நாள் பழக்கம் போலப் படபடவெனப் பேசத் தொடங்கிவிட்டார்.

‘இங்க, என்னைத் தெரியாத, எழுத்து மூலமா மட்டுமே தெரிஞ்சவங்கள்ளாம், அம்பைனா, மாறி மாறி சிகரெட்டா பிடிச்சுண்டே இருப்பா; சிகரெட் முடிஞ்சதும் அப்படியே தொபக்கடீர்னு கட்டில்ல பாஞ்சு படுத்துடுவாங்கற அபிப்ராயத்துல இருக்கா’ என்று அவ்வப்போது தொண்டை கட்டிக்கொண்டது போல ஆகிவிடுகிற குரலில் சொல்லிவிட்டு, மாலை நேரத்து மெளன்ட்ரோடின் பரபரப்புக்கிடையில், அருகில் கடந்து செல்வோர் நின்று பார்க்கும்படி தன்னை மறந்துப் பகபகவென சிரித்தார். அதில் கொஞ்சம் நாடகீயம் இருந்தாலும் அவரை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு இருந்ததால். அதுவும் சேர்ந்து இவனுக்குப் பிடித்திருந்தது. உள்ளூர, தான் சிகரெட்டை நீட்டியதற்காகத்தான் அதைச் சொல்கிறார் என ஒரு கணம் சுருக்கென்றாலும் பிடித்திருந்தது. பெரிய அழகென்று சொல்லமுடியாவிட்டாலும் பளிச்சென்று தீர்க்கமாகப் பார்க்கிற கண்கள். அம்மா ஒரு கொலை செய்தாளில் வருகிற அளவுக்குக் கருப்பில்லை. பிராமணப் பெண் என்று பார்த்தால் நிறம் கொஞ்சம் மட்டுதான். கொஞ்சம் இருட்டினால் மாநிறத்துக்குக் கம்மியாகவும் தோன்றக்கூடும். கதைக்காக அம்மாவைப் பால்போல வெள்ளையாக ஆக்கித் தன்னைக் கறுப்பாக்கிக் கொண்டிருக்கவேண்டும். குள்ளம். கொஞ்சம் பூசினதைப்போல குண்டு. பேச்சைப் போலவே ஆளும் திம்மென்று திமிர்ந்திருப்பதாகப் பட்டது. கண்களையே பார்த்துப் பேசவேண்டும். பார்க்காத சமயத்தில், பார்க்காத மாதிரி அங்கே இங்கே பார்த்து மாட்டிக்கொண்டு கேவலப்பட்டுவிடக்கூடாது என கொஞ்சம் மெனக்கெடவேண்டி இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!