சுந்தர் பிச்சை
மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை வளர்ந்ததெல்லாம் சென்னையில். சுந்தரின் தந்தை ரகுநாத பிச்சை, ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராகப் பணி செய்தவர். தாயார் லட்சுமி, சுந்தர் பிச்சை பிறப்பதற்கு முன்புவரை ஸ்டெனோகிராபராக வேலை செய்து வந்தார். அடிப்படைத் தேவைகளைத் தவிர வேறு ஆடம்பரங்கள் இல்லாத வீட்டுச் சூழலில், அசோக் நகரில் வசித்தது சுந்தர் பிச்சையின் குடும்பம். புத்தகங்கள் படிப்பதும், மின்சாதனங்கள் தொடர்பாகத் தந்தையுடன் உரையாடுவதும் அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகள்.
ஆரம்பக்காலப் பள்ளிப்படிப்பை அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயாவிலும், மேல்நிலைக் கல்வியைச் சென்னை ஐஐடி வளாகத்தில் இருக்கும் வனவாணி பள்ளியிலும் படித்தார். இயல்பிலேயே மென்மையான போக்குடையவர் சுந்தர் பிச்சை. கால்பந்தும் கிரிக்கெட்டும் பிடித்தமான விளையாட்டுகள். பார்சிலோனா அணிக்கும், மெஸ்ஸியின் புயல்வேக ஆட்டத்துக்கும் ரசிகர். பள்ளி கிரிக்கெட் அணிக்குத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
சென்னையில் அவர் வளர்ந்த காலத்தில் கடுமையான வறட்சி நிலவியதால் தண்ணீர் குறித்த ஒரு பயம் அவருக்கு எப்போதும் இருந்தது. இப்போதும் கூட அவருடைய படுக்கைக்கு அருகில் ஒரு தண்ணீர் பாட்டில் இல்லாமல் தூங்க முடியாது என்கிறார்.










Add Comment