பாறைக்குள் உறையும் சிற்பத்தைக் கொணர வல்லவனுக்குச் சிந்தைக்குள் இருந்து சிவத்தைக் கடைந்தெடுக்க இயலாதென்றா எண்ணிவிட்டார்? நான் எதையும் கைவிடுபவனல்லன். என்னால் தோற்க இயலாது.
சீடர்களைப் பரிசலில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர் நிலத்தில் நடப்பது போலவே நதியின் மீது நடந்து வருவதைக் காணும் போதெல்லாம் அவன் திகைத்துத் திகைத்துத் தணிந்துகொண்டிருந்தான்.
நான் நினைத்தது சரி. நான் ஏந்தி எறிந்த கருவிளத்தைக் கூவிளமாக்கி அவனுக்குக் காட்டிப் பிறகு அதைப் பொசுக்கிச் சாம்பராக்கித் தனது சங்கேதத்தைத் தெரிவித்த அவன் வேட்டன் எறிபத்தன்.
நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு கருவிளம்பூ உதிர்ந்த நொடியில் அதனுள் என் சிந்தையைச் செலுத்தி அவனை நோக்கி வீசினேன். அது காற்றில் மிதந்து தொலைவைக் கடந்து அவனை அடைந்து மடியில் உதிர்ந்தது.
என் சிந்தையைப் பரிபூரணமாகக் குவித்து என்னைச் சிந்திக்கும் உருவற்ற மனிதனைத் தேடினேன். மீண்டும் மீண்டும் என் கவனம் சார்வாகனின் சிந்தையிலேயே வந்து குவிவதையும் கண்டேன்.