32. மிகவும் அன்பான கணவர்
1895ம் ஆண்டு, ஃபெர்குஸ்ஸன் கல்லூரிக்கான புதிய கட்டடமும் விடுதியும் திறக்கப்பட்டன. அதற்குத் தேவைப்பட்ட மொத்தத் தொகையும் நன்கொடைகளின் மூலம் திரட்டப்பட்டிருந்தது. அதனால், டெக்கன் கல்விக் கழகம் எந்தக் கடன் சுமையிலும் சிக்கிக்கொள்ளாமல் தன்னுடைய சேவைப் பணிகளைத் தொடர இயன்றது.
இந்தச் சாதனையில் பெரும்பங்கு கோகலேவுக்குச் சேரவேண்டும். சனி, ஞாயிறுகள், தன்னுடைய தனிப்பட்ட விடுமுறை நாட்கள் என அனைத்தையும் இந்த நன்கொடை திரட்டலுக்காகக் கொடுத்திருந்தார் அவர். எத்தனையோ அவமதிப்புகளைத் தாங்கிக்கொண்டு விடாமல் முயன்று பெருந்தொகையைச் சேர்த்திருந்தார். அதன்மூலம் புணே நகரப் பொதுமக்கள், தலைவர்கள் அவரைப் புதிய வெளிச்சத்தில் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள்.
இதே காலகட்டத்தில் அரசியல் களத்திலும் கோகலே விரைவாக வளர்ந்துகொண்டிருந்தார். 1889 மும்பை காங்கிரஸில் முதன்முதலாக மேடையேறிய அவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் கொல்கத்தா, நாக்பூர், அலகாபாத், சென்னை என்று பல காங்கிரஸ் கூட்டங்களில் வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றினார், 1895ல் இந்தியத் தேசியக் காங்கிரஸின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.










Add Comment