44. சேறு
மான்செஸ்டர் கார்டியன் இதழில் கோகலேவின் பேட்டி வெளியானதும், ஏற்கெனவே கொதித்துக்கொண்டிருந்த சூழல் வெடித்துச் சிதறலானது. கோகலேவின் நேரடியான, கடுமையான குற்றச்சாட்டுகள் இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் மிகப் பெரிய அசிங்கமாகிவிட்டன. அதை உடனடியாக மறுத்தாகவேண்டும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு உண்டானது.
இந்த விஷயத்தில் கோகலே சற்று அவசரப்பட்டுப் பேசிவிட்டார் என்பது உண்மைதான். ஆனால், அவர் சொன்ன குற்றச்சாட்டுகளில் எவையும் புதிதில்லை. ஏற்கெனவே இந்தியாவில் பலர் அவற்றைப்பற்றிப் பேசியிருந்தார்கள், இதே அளவு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்கள். ஆனால், அவையெல்லாம் உள்ளூர் இதழ்களோடு நின்றுவிட்டன. கோகலே பேசியது இங்கிலாந்தில் வெளியானதால் அவர்மீது கூடுதல் வெளிச்சம் விழுந்துவிட்டது.
வில்லியம் வெட்டர்பர்ன் கேட்டதுபோல் புணேவில் நடந்தவற்றைப்பற்றிய ஒரு முழுமையான விசாரணை நடத்தினால் இந்தக் குற்றச்சாட்டுகளில் எவையெல்லாம் உண்மை, எவையெல்லாம் கற்பனை என்று உறுதிப்படுத்தியிருக்கலாம். ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் அதை விரும்பவில்லை. இதைப்பற்றி விசாரணை நடத்துவதே பிரிட்டிஷ் இந்திய ஆட்சியை, அலுவலர்களை, இராணுவ வீரர்களை அவமதிப்பதாகும் என்று அவர்கள் நினைத்தார்கள். அதனால், அப்போதைக்குத் தங்கள்மீது விழுந்திருக்கிற சேற்றை விரைவாகத் துடைத்துவிடவேண்டும் என்பதில்தான் அவர்களுடைய ஆர்வம் இருந்தது. அதற்கு ஒரே வழி, சேறு வீசிய நபரின்மீது சேற்றை வீசுவதுதான்!










Add Comment