83. மேலும் தடைகள்
கோகலே தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த கையோடு காந்தியைப்பற்றி ஒரு விரிவான உரையை நிகழ்த்தினார். அங்குள்ள இந்தியர்களின் நலனுக்காகக் காந்தி என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என்பதை இங்குள்ள இந்தியர்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்திவிடவேண்டும் என்கிற அவருடைய ஆர்வம் அதில் வெளிப்படையாகத் தெரிந்தது.
‘என் வாழ்க்கையில் நான் எத்தனையோ பேரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், காந்தி அளவுக்கு என்னை ஆன்மிக நிலையில் பாதித்தவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று, மாபெரும் தலைவரான தாதாபாய் நௌரோஜி. இன்னொன்று, என் குருவான ரானடே’ என்று அந்த உரையில் காந்தியை நன்றாகப் புகழ்ந்தார் கோகலே, ‘இந்த மூவருக்கு முன்னாலும் நாம் எந்தத் தவற்றையும் செய்யத் தயங்குவோம். செய்வது என்ன? இவர்களுக்கு எதிரில் இருக்கும்போது தவறான எண்ணங்கள்கூட நம் மனத்தில் தோன்றாது!’
இப்போதும், காந்தி விரைவில் இந்தியா திரும்பிவிடுவார் என்றுதான் கோகலே நினைத்துக்கொண்டிருந்தார். அதனால், அங்கு காந்தியை இந்தியாவுக்கு ஆயத்தப்படுத்தியதுபோல், இங்கு இந்தியாவைக் காந்திக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார் அவர்.










Add Comment