3. பி-பிரிவு
நகரின் நான்கு புற எல்லைகளில் இருந்தும் அவர்கள் நடந்துதான் வந்தார்கள். மொத்தம் எத்தனை பேர் என்று யாரும் எண்ணவில்லை. நூறு பேரில் இருந்து நூற்று முப்பது பேர் இருக்கலாம் என்று சில தகவல்கள் உள்ளன. ஆனால் அது துல்லியமான எண்ணிக்கை அல்ல. ஏனெனில், மே இரண்டாம் தேதி மாலை கலாத் மாவட்டத்தில் உள்ள மங்கோச்சர் நகர வீதிகளில் நடந்து போய்க்கொண்டிருந்த அத்தனை பேருமே பல இடங்களில் அரசுக் கட்டடங்களின் அருகே உள்ள கட்டடங்களின் உப்பரிகையில் துணியால் முகம் சுற்றி, ஆயுதம் ஏந்தி நின்ற பலரைப் பார்த்திருந்தார்கள். நிச்சயமாக ஒரு சம்பவம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு அவசரமாகக் கடந்து போனார்கள்.
மங்கோச்சர் நகரத்து மக்களின் கவலையெல்லாம் ஆயுததாரிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது பற்றி அல்ல. நகருக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் எத்தனை பேர் இருக்கிறார்கள், காவல் துறையினர் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களுக்கு உளவுத் தகவல் போயிருக்குமா, பதிலடிக்கு ஆயத்தமாகியிருப்பார்களா என்பதுதான். எப்போதும் இருக்கும் பாதுகாப்பு, எப்போதும் இருக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளால் பிரச்னை இல்லை. ஆயுததாரிகள் அவற்றை எளிதாகத் தகர்த்துவிடுவார்கள். குறிப்பிட்ட தாக்குதல் சார்ந்த தகவல் கசிந்திருந்தால்தான் விஷயம் வேறு. இரு தரப்புத் தாக்குதலும் உக்கிரமாகிப் பொது மக்கள் சிக்கிக்கொள்ளும் அபாயம் நேரிடலாம்.
பலூசிஸ்தானில் அரசுப் பணியில் உள்ளவர்களைத் தவிர மற்ற அத்தனை பேருக்கும் விடுதலை இயக்க வீரர்களைக் குறித்த கவலை கிடையாது. அவர்கள் பொது மக்களைத் தாக்க மாட்டார்கள். குடியிருப்புப் பகுதிகளில் சேதம் விளைவிக்க மாட்டார்கள். திரைப்படங்களில் காட்டப்படும் கடைவீதி குண்டுவெடிப்புகள் நிகழாது. எனவே வியாபார சேதாரம் கிடையாது. இவை அனைத்தையும்விட முக்கியமான விவரம் ஒன்றுண்டு. திட்டமிட்டுச் செய்யும் தாக்குதல்களின்போது குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எங்கிருந்தாவது சங்கேதமாகத் தகவல் சொல்லி அனுப்பிவிடுவார்கள். ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. எனவே வேறெங்காவது சென்றுவிடுங்கள். எனவே மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டுவிடுவார்கள்.
ஆனால் அன்றைக்கு அவர்கள் கண்ட காட்சி வினோதமாக இருந்தது. அது முன்னறிவிப்பில்லாமல் ஏற்பாடாகியிருந்தது. ஓரிடம் அல்ல. ஓர் இலக்கு அல்ல. நகரின் பல்வேறு இடங்களில் உள்ள பல்வேறு அரசுக் கட்டடங்கள் சுற்றி வளைக்கப்பட்டிருந்தன. எப்போது திட்டமிட்டார்கள், என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று யோசிக்கத் தொடங்குவதற்குள் படபடபடவென இயந்திரத் துப்பாக்கிகள் அதிரும் சத்தம் கேட்கத் தொடங்கியது.










Add Comment