39. இரண்டு நிபந்தனைகள்
அரசுப் பணி என்பதை உலகம் பார்க்கும் விதத்துக்கும் பலூச்சிகள் பார்க்கும் விதத்துக்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. அரசாங்க வேலை என்பதை ஒரு பாதுகாப்பாகவோ, நிம்மதியான வாழ்க்கைக்கான உத்தரவாதமாகவோ, பென்ஷன் சௌகரியங்கள் சார்ந்த சந்தோஷமாகவோ அவர்கள் கருதுவதில்லை. அவர்கள் தங்களைத் தமது இனத்தின் அடையாளத்தைக் கொண்டே வெளிப்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள். தேசியம் என்றால் பலூச்சி தேசியம்தான். பாகிஸ்தான் தேசியம் அல்ல. தலைவர்கள் என்றால், அந்தந்த மக்களுக்கு அவரவர் பழங்குடி இனத் தலைவர்கள். மன்னர் என்றால் கலாட்டின் மன்னர். இதற்கு அப்பால் ஓரடிகூட அவர்கள் முன்னும் பின்னும் நகர்ந்ததில்லை. இன்று வரை பலூச்சிகள் அப்படித்தான்.
ஆனால் அவர்கள் விரும்பிய தேசிய அடையாளம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டபோது என்னவாவது செய்து அரசு இயந்திரத்தின் ஓர் அங்கமாகப் பொருத்திக்கொண்டு விடுவது எதிர்காலத்தில் ஓரெல்லை வரையிலாவது தமது மண்ணும் அதன் அதிகாரங்களும் தங்கள் கையில் மீதமிருக்க உதவும் என்று நினைத்தார்கள். அரசு வேலைக்குச் செல்லும் பலூச்சி இளைஞர்களிடம் அவரவர் இனக்குழுத் தலைவர்களும் அதை மட்டுமே சொல்லி அனுப்புவார்கள்.
உலகில் வேறெங்கும் நடக்காத, நடக்க வாய்ப்பும் இல்லாத இன்னொரு சம்பவம் பலூசிஸ்தானின் கிராமப்புற அலுவலகங்களில் நடக்கும். ஊழியர் யாராவது ஒரு நாள் இரண்டு நாள் வேலைக்குப் போக முடியாது போனால் அவருக்கு பதிலாக அவர் தம்பியோ தங்கையோ மாமனோ சித்தப்பாவோ போய் உட்கார்ந்து அந்த வேலையைக் கவனித்துவிட்டு வருவார்கள். அதிகாரியாக இருப்பவரும் பலூச்சியாகவே இருந்துவிடுவதால், நீ ஏன் வந்தாய், உனக்கென்ன தெரியும் என்றெல்லாம் கேட்க மாட்டார். கேட்டால் ஊரே கூடி ஒரு வழியாக்கிவிடும்.










Add Comment