64. ‘ரா’க்கோழி
இஸ்ரேல் பாலஸ்தீன் சிக்கலுக்கு அடுத்தபடி, தீராத-தீர்க்க முடியாத-யாருக்கும் தீர்க்கும் விருப்பமில்லாத பெரும் சிக்கல் ஒன்று உண்டென்றால் அது இந்தியா-பாகிஸ்தான் உறவு அல்லது உறவற்ற நிலை. தேசப் பிரிவினை சமயத்தில் உருவான சிக்கல் அல்ல இது. முஸ்லிம் லீக் என்ற கட்சி இந்திய அரசியலில் வேர் கொள்ளத் தொடங்கி, முஸ்லிம்களுக்குத் தனிநாடு என்று பேச ஆரம்பித்தபோதே உருவாகத் தொடங்கியது. அதைப் பற்றிப் பேசுவது நேர விரயம். எப்படி இந்தியாவுக்குள் அரசியல் குழப்பங்கள் விளைவிக்கப் பாகிஸ்தான் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதோ, அதே போலத்தான் பாகிஸ்தான் அரசு எதிர்கொள்ளும் பல்வேறு உள்நாட்டுப் பிரச்னைகளின் பின்னணியில் இந்திய உளவுத் துறை இருந்ததாக / இருப்பதாக அவர்கள் தரப்பு சொல்லும். சென்ற அத்தியாயத்தில் நாம் விரிவாகப் பார்த்தோம். இதற்கெல்லாம் வலுவான ஆதார ஆவணங்கள் கிடைக்காது. எனவே எதையும் அடித்துப் பேச முடியாது; அழுத்தம் திருத்தமாக நிறுவ முடியாது. ஆனாலும் அது உண்டு. எப்போதும் உண்டு.
அறுபதுகளில் கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து தனிநாடு காண்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளில் இந்தியாவின் பங்களிப்பு இருந்தது உலகுக்கே தெரியும். அதன் தொடர்ச்சியாக 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரும் அதன் விளைவுகளும் இந்த வரலாற்றிலேயே முந்தைய அத்தியாயம் ஒன்றில் விவரிக்கப்பட்டுள்ளன. நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான்.
இந்தியாவும் சரி, பாகிஸ்தானும் சரி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு ஏராளமான சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நாடுகள். அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அந்த இணைப்பு இயல்பானதாகவும் அனைத்துத் தரப்புக்கும் நியாயம் செய்வதாகவும் அமைந்தது. இன்று வரை தீராத சில சிக்கல்கள் உண்டென்றாலும் வலுவான, உறுதிமிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் ஜனநாயகம் கட்டிக்காக்கப்படுவதால் பெரிய விபரீதங்கள் இல்லாமல் நாம் வாழ்கிறோம்.










Add Comment