71. மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சி
மே 9, 2025 அன்று நள்ளிரவு மிர் யார் பலோச் என்கிற பலூசிஸ்தான் எழுத்தாளர் – பத்திரிகையாளர் எக்ஸ் தளத்தில் அறிவித்தார். இனி பலூசிஸ்தான், பாகிஸ்தானின் ஒரு மாநிலமல்ல. அது ஒரு சுதந்தரக் குடியரசு. எங்களைப் பாகிஸ்தானியர் என்று சொல்லாதீர்கள். நாங்கள் பாகிஸ்தானியர் இல்லை; பலூச்சிகள். ஆண்டாண்டுக் காலமாக எங்கள் நிலத்தின் வளங்களைச் சுரண்டிக்கொண்டு எங்களை ஏய்த்து வந்த பாகிஸ்தானில் இருந்து நாங்கள் பிரிந்துவிட்டோம். ஐநா எங்களை அங்கீகரிக்க வேண்டும். உடனடியாக பலூசிஸ்தானுக்கு அமைதிப் படை ஒன்றை அனுப்ப வேண்டும். இங்குள்ள பாகிஸ்தான் ராணுவம் முழுதாக விலக உதவ வேண்டும். இந்தியா எங்களை அங்கீகரிக்க வேண்டும். பலூசிஸ்தானில் தூதரகம் திறக்க வேண்டும். புது டில்லியில் பலூசிஸ்தான் தூதரகம் அமைய வழி செய்ய வேண்டும். நாங்கள் இந்தியாவை நம்புகிறோம். இந்தியாவை முழுவதுமாக ஆதரிக்கிறோம். அபகரிப்பு காஷ்மீர் நிலத்தில் இருந்து பாகிஸ்தான் அரசும் ராணுவமும் முற்றிலுமாக விலக வேண்டும் என்கிற இந்திய நிலைபாட்டை அப்படியே ஏற்கிறோம். அதுதான் சரி. தனக்கு உரிமை இல்லாத நிலங்களான – வடக்கே காஷ்மீரையும் தெற்கே பலூசிஸ்தானையும் இப்படித்தான் பாகிஸ்தான் அபகரித்து வைத்துள்ளது…
இவை தொடக்கம். தனித்தனி ட்விட்களாக அவர் போட்டுக்கொண்டே இருந்தார். பல்லாயிரக் கணக்கான பலூச்சிகள் உடனுக்குடன் அவற்றைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். திடீரென்று #RepublicOfBalochistan என்கிற ஹேஷ்டேக் பிரபலமானது. அனைத்து சமூக ஊடக வெளியிலும் மக்கள் இதனைப் பேசினார்கள். கவனியுங்கள். மே ஏழாம் தேதிதான் இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் (ஆப்பரேஷன் சிந்தூர்) திரும்பியிருந்தது. எட்டாம் தேதி அந்தச் சம்பவம் உலகுக்குத் தெரிய வந்தது. மறுநாளே இந்தியாவின் செயல்பாட்டை ஆதரித்தும் இந்தியா தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியும் பலூசிஸ்தான் தேசியவாதியும் விடுதலை இயக்கத் தலைவரும் எழுத்தாளருமான ஒருவர் எக்ஸ் தளத்தில் எழுதுகிறார்.










Add Comment