31. பிச்சை புகுதல்
பணம் படைத்தவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவவேண்டும் என்றும், அது அவர்களுடைய கடமை என்றும் பல்வேறு நூல்கள் சொல்கின்றன. மதப் பெரியோர்களில் தொடங்கித் தலைவர்கள் பலரும் இதைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள், ‘பிறருக்கு உதவி செய்து மகிழுங்கள்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், பணம் படைத்த எல்லாரும் இதைப் பின்பற்றுவதில்லை. சிலர் விரும்பிக் கொடுக்கிறார்கள், சிலர் விருப்பமில்லாமல் கொடுக்கிறார்கள், இன்னும் சிலர் எதையும் கொடுக்காமல் பெட்டியைப் பூட்டித் திறவுகோலை இடுப்பில் செருகிக்கொண்டுவிடுகிறார்கள்.
DESக்காகவும் ஃபெர்குஸ்ஸன் கல்லூரியின் புதிய கட்டடத்துக்காகவும் நன்கொடை கேட்டுக் கோகலே சந்தித்த பெரிய மனிதர்களில் இந்த மூன்று வகையினரும் இருந்தார்கள். ஆனால், யார் எந்த வகை என்று முன்கூட்டியே தெரியாது. எல்லாரும் கொடுக்கக்கூடியவர்கள்தான் என்று திறந்த மனத்துடன் அவர்களை அணுகிக் கேட்கவேண்டும், அதற்கு அவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து அடுத்த நடவடிக்கையைத் தீர்மானிக்கவேண்டும். எல்லாரிடமும் பொறுமையாகப் பேசவேண்டும்; அவர்கள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லவேண்டும்; முகத்திலடித்தாற்போல் இழிவுபடுத்திப் பேசினாலும் பொறுத்துக்கொள்ளவேண்டும்; நாளைக்கு வா என்றால் மறுநாள் வரவேண்டும்; இன்னொரு நாள் வா என்றால் அந்த நாளிலும் சரியான நேரத்தில் வந்து நிற்கவேண்டும்; எதற்காகவும் யார்மீதும் சினம் கொள்ளக்கூடாது.










Add Comment