57. மரண விளையாட்டு
இரண்டாயிரமாவது ஆண்டு முதலே பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டது என்றாலும் அந்த அமைப்பு பரவலாக வெளியே தெரியத் தொடங்கியது 2006 ஆம் ஆண்டுதான். சிந்தி மருத்துவர் ஷாஜியாவுக்கு நேர்ந்த வன்கொடுமை, அதன் தொடர்ச்சியாக நவாப் அக்பர் புக்தி தலைமையிலான போராளிகள் நிகழ்த்திய தாக்குதல்கள், பாகிஸ்தான் ராணுவம் அக்பர் புக்தியைக் கொன்றது – இவை மூன்றையும் பின்னணியில் நினைவில் நிறுத்துங்கள். BLA அத்தருணத்தில்தான் தனது தாக்குதல்கள் மேலும் தீவிரம் கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஆரம்பித்தது.
டிசம்பர் 14, 2006 அன்று பர்வேஸ் முஷாரஃப் பலூசிஸ்தானுக்கு வந்தார். சொல்லப்பட்ட காரணம், கோலு மாவட்டத்தில் இருந்த ஒரு துணை ராணுவ முகாமை அதிபர் பார்வையிட வருகிறார் என்பது. அவரது வருகைக்கான உண்மைக் காரணம் வேறு. அந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதிதான் நவாப் அக்பர் புக்தி கொல்லப்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக பலூசிஸ்தான் முழுதும் மக்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கியிருந்தனர். பி.எல்.ஏ உள்பட விடுதலை இயக்கங்கள் அனைத்தும் மூலைக்கொரு சம்பவம் செய்துகொண்டிருந்தன. எனவே ஒரு மாபெரும் தாக்குதல் நிகழ்த்தி, சிறிது காலத்துக்காவது பலூச்சிகள் அடங்கியிருக்கும்படி ஏதாவது செய்ய முடிகிறதா பார்க்கலாம் என்று முஷாரஃப் நினைத்தார். மாபெரும் என்றால் உண்மையிலேயே மாபெரும். ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்படும்போது ஓர் அச்சம் வரும். அது அடங்கி ஒடுங்கச் செய்யும் என்று அவர் நினைத்தார். இதையெல்லாம் யாரும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டுச் செய்ய முடியாது அல்லவா? பின்னால் நடந்த சம்பவங்களைக் கொண்டு ஊகித்தறிய வேண்டியவை.
பலூச்சி தேசியவாதம் பேசும் அத்தனை பேரையும் கொன்றுவிடுவது என்பதுதான் அன்றைய தேதியில் முஷாரஃப்பின் முடிவு. தேடிப் பிடித்துச் சிறையில் அடைப்பதெல்லாம் கட்டுப்படியே ஆகாது என்று அவர் நினைத்தார். ஆனால் எந்தத் திட்டமும் கசிந்துவிடாமல் மிகக் கவனமாக ராணுவம் செயலாற்ற வேண்டும். அதைப் பேசி வடிவமைப்பதே அவரது வருகையின் உண்மை நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.










Add Comment