63. குல்பூஷன்
இந்த வரலாற்றின் மிக முக்கியமானதொரு கட்டத்துக்கு இப்போது வந்து சேர்ந்திருக்கிறோம். காலம் காலமாகப் பாகிஸ்தான் இந்தியாவின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுள் இது முதன்மையானது. தீவிரமானது. தவிரவும் தடாலடியாக இடது கையால் மறுத்து ஒதுக்கிவிட முடியாததும்கூட. பலூசிஸ்தானில் RAW. பார்த்துவிடலாம்.
இது ஒரு விசித்திரம். எல்லா நாடுகளிலும் குறைந்தது இரண்டு உளவு அமைப்புகள் இருக்கும். ஒன்று உள்நாட்டு விவகாரங்களைக் கவனிக்கும். இன்னொன்று அண்டை நாட்டு அறப்பணிகளில் ஈடுபடும். இந்த இரண்டு அமைப்புகளுக்குமே பல துணை அமைப்புகள் இருக்கும். ராணுவ உளவுத் துறை என்பது இன்னொரு முக்கியமான தனிப் பிரிவு. அது ஒரு தனி உலகம். அங்கே பல உட்பிரிவுகள். இதெல்லாம் இல்லாத, இவை தீவிரமாக இயங்காத நாடுகள் கிடையாது. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் தவிர வேறெந்த நாடும் தனது உளவு அமைப்பின் செயல்பாடுகளை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளாது.
ஓர் உளவாளி, எதிரி நாட்டில் பிடிபட்டுக் கைதானால் ஒன்று, கூசாமல் அவர் யாரென்றே தெரியாது என்று சொல்லிவிடுவார்கள். அல்லது அவர் உணவுத் துறை அதிகாரிதானே தவிர உளவுத் துறைக்கும் அவருக்கும் சம்பந்தமே கிடையாது என்பார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் உளவுத் துறை இன்றியமையாதது. ஆனால் காலம் முழுவதும் கள்ளக்காதலி போலத்தான் வாழ்ந்தாக வேண்டும்.
ஓர் உதாரண சம்பவத்துடன் தொடங்கினால் இந்தப் பகுதி புரிவதற்கு எளிதாக இருக்கும்.










Add Comment