இலங்கையின் அதிபர் ஒருவர் முதல் முறையாகக் கச்சத்தீவு மண்ணில் கால் பதித்திருக்கிறார். த.வெ.க தலைவர் கச்சத்தீவு பற்றி கருத்து சொன்னதால்தான் உடனடியாக அனுர அங்கே போனாரா? இல்லை ஏதாவது திட்டமிட்ட பயணமா? இப்படிப் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. அப்படி எல்லாம் இல்லை, இது சாதாரணப் பயணம்தான் என்று இலங்கை அரசாங்கம் சூடம் அணைத்து சத்தியம் செய்கிறது. இருந்தாலும் இதற்கு முன் எந்தவொரு இலங்கை அதிபரும் இதுபோல செய்யவில்லை என்பதால் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தக் கச்சத்தீவு பயணம்.
எப்போதும் போலத்தான் இப்போதும் கச்சத்தீவு பேசுபொருளாகியிருக்கிறது. ஆனால் இம்முறை ஒரு வித்தியாசம். இலங்கையின் அரசியல் அரங்கிலும் கச்சத்தீவு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசியலில் முக்கிய விவகாரமாகக் கச்சத்தீவு இருந்தாலும், இலங்கையின் தேசிய அரசியலில் அது தீவிரமாகக் கவனிக்கப்படுவதில்லை. மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் கச்சத்தீவை மீட்டுத்தர வேண்டும் என்று பேசியிருந்தார்.
ஏனையவர்கள் போல அவரும் ஒரு நீண்டநாள் அரசியல்வாதியாக இருந்திருந்தால் இந்த விஷயம் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள் என்று பேசாதவர்கள் எவரும் இல்லையே? ஆனால் அப்போதெல்லாம் நிகழாத ஒன்று இப்போது நிகழ்ந்திருக்கிறது. அதுதான் இலங்கை அதிபரின் பயணம். இதற்கு இந்தியாவின் பதில் என்னவாக இருக்கப் போகிறது என்பதையே அனைவரும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.















Add Comment