அட்சய பாத்திரம்
எந்திரன் என்ற மாபெரும் வெற்றியைக் கொடுத்த ஷங்கர் அதனுடைய இரண்டாவது பாகமாக 2.0 என்ற படத்தை எடுக்க விரும்பினார். மூன்று வேடங்களில் ரஜினி. வில்லனாக அக்க்ஷய் குமார், ஏ ஆர் ரகுமான் இசை என மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படத்தைத் தயாரித்தது லைகா புரொடக்ஷன்ஸ். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியான இந்தப்படம் அதுவரை ரஜினி நடித்த படங்களில் மிக அதிகமான வசூலை ஈட்டிய படம் என்ற சாதனை படைத்தது. எழுநூறு கோடிக்கு மேல் வசூல் என்று சொல்லப்பட்டது. இதன் மூலம் தமிழ் சினிமா இதுவரை தொடாத ஓர் எண்ணிக்கையைத் தொட்டார் ரஜினிகாந்த். அந்தப் படத்தில் நடிக்கும்பொழுது அவருடைய வயது அறுபது.
ரஞ்சித் படங்களில் நடிப்பது என்ற முடிவை ரஜினி எடுத்தவுடன் அவரை வைத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த சீனியர் இயக்குநர்களுக்கு இனிமேல் அவர் தங்களுடன் பணி புரியமாட்டார் என்று புரிந்து விட்டது. அதே போல் அடுத்து அவர் கைகாட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். இவரை ரஜினி வெறியர் என்றுதான் சொல்ல வேண்டும்.
திரையில் ரஜினியை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டோமோ அப்படியெல்லாம் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தார் கார்த்திக் சுப்பாராஜ். வயதுக்கு ஏற்ற வேடம். பிளாஷ்பேக்கில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ரஜினி. ஆட்டம், சண்டை, நகைச்சுவை என்று விதவிதமாக எடுத்தார். இப்படியொரு ரஜினியைப் பார்த்து எவ்வளவு வருடங்களாகிறது என்று ரசிகர்கள் கொண்டாடிய அந்தப் படம்தான் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு.










Add Comment