5. கொள்.
அவனை விட்டு அகலவே கூடாது என்று உனக்குச் சொல்லியிருக்கிறேன். இருந்தும் குடந்தைக் காரோணத்தின் வெளியே அவன் மிதிபட்ட நேரத்தில் அருகே இல்லாமல் போய்விட்டாய். இது மிகப் பெரிய தவறு என்று அபுதுவின் உட்செவியில் அக்குரல் ஒலித்தது. நீண்ட சொற்றொடர்கள். நான் நிலைகொண்டு கவனிக்கவும் பின்தொடர்ந்து செல்லவும் நியாயமாகச் சிக்கலேதும் இருந்திருக்கக் கூடாது. ஆனால், அக்குரலில் இருந்த துல்லியமும் தெளிவும் அது எங்கிருந்து வந்ததென்பதில் இல்லை.
கீழ்க்கோட்டத்து ஊட்டுப்புரைக்கு அவன் பகல் உணவுக்காகச் சென்றபோது கவனித்தேன். நான்கைந்து மடைகளில்* கொதித்துக்கொண்டிருந்த சாறை* ஆஜானுபாகுவான அடுவார்கள்* பிடிதுணி கொண்டு இறக்கி உருட்டித் தூக்கி, ஒரு கடாரத்தில்* கொட்டினார்கள். நான்கு பேர் ஒரே சமயத்தில் கடாரத்தில் சாறூற்றிய காட்சி, காண்பதற்கு அதிசயமாக இருந்தது. சற்றுக் கரம் பிசகினால் விபத்தாகிவிடும். பெருஞ்சத்தத்தோடு ஆவி பறக்க அவர்கள் நாலாபுறமிருந்தும் நெஞ்சுயரத்துக்குக் கொப்பரைகளைத்* தூக்கிக் கடாரத்தில் கொட்டியபோது எழுந்த ஆரவாரம் பெரிது. அதற்கு நிகர் ஒன்று உண்டென்றால், அந்தக் குரல் வந்த திக்கைக் கணிக்க முடியாது போனதற்கான காரணமாகத்தான் இருக்க வேண்டும்.
ஒரு மனிதக் குரல். அது அபுதுவின் உட்செவியில் தெளிவாகக் கேட்டது. ஆனால் அதன் ஊற்றைக் கணிக்கப் பார்த்தபோது அது எண்திசைகளுக்கும் என்னை இழுத்துச் சென்றது. எங்கும் உள்ளதாகவும் எதுவுமற்றதாகவும் ஒரு தோற்ற மயக்கம் உண்டானது. இதெல்லாம் எதனால், எப்படி நடக்கிறதென்று விளங்கவில்லை. விபரீதங்களின் விமானமே* ஆயினும் கற்படை* கொண்டுதான் எழுப்பியாக வேண்டும். அடுக்கப்படும் கற்களும் விபரீதத்தில் விளைந்தவையாகத்தான் இருக்க முடியும். வியக்க ஒன்றுமில்லை. நானொரு விபரீதம். விபரீத விமானங்களாலும் எட்டித் தொடவியலாத மூல விபரீதம். என்னை ஒருவன் தனது சிந்தையில் தொடுகிறானென்றால் அதன் தொடர்ச்சியாக நிகழும் எதிலும் அமைதியின் தடம் தென்பட வாய்ப்பில்லை என்பது இயல்பானதே அல்லவா?










Add Comment