10. மனப்பாட மன்னர்
கோகலேவை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்பது அவருடைய தந்தை கிருஷ்ண ராவின் கனவு. ஆனால், அவர் அந்தக் கனவை எந்த அளவுக்குத் தன்னுடைய மகனிடம் விளக்கிப் புரியவைத்தார் என்று தெரியவில்லை.
அதாவது, ஆங்கிலம் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், பல கதவுகள் திறக்கும், சமூகத்தின் உயர்நிலைக்குச் செல்லலாம், உலகத்தை இன்னும் பரவலாகவும் நுணுக்கமாகவும் புரிந்துகொள்ளலாம் என்றெல்லாம் கிருஷ்ண ராவுக்குப் பல எதிர்பார்ப்புகள் இருந்திருக்கக்கூடும். அவரே ஆங்கிலம் படிக்க முயன்று பாதியில் நிறுத்தியவர் என்பதால் இந்த எதிர்பார்ப்புகள் பேரார்வமாக மாறியிருக்கும். அந்தக் கனவைத்தான் அவர் தன்னுடைய மகன்களின்மூலம் நனவாக்க முயன்றார்.
அவருடைய இந்த உணர்வுகளெல்லாம் அந்தச் சிறுவயதில் கோகலேவுக்குப் புரிந்திருக்க வாய்ப்பு குறைவு. ‘அப்பா என்னை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். அதனால் நான் ஆங்கிலம் படிக்கிறேன்’ என்கிற அளவில்தான் அவர் இதைப் பார்த்திருப்பார், மற்ற பாடங்களைப்போலத்தான் ஆங்கிலத்தையும் அணுகியிருப்பார்.










Add Comment