13. நான் அமைச்சராவேன்
1882 டிசம்பரில், கோகலே BA பட்டப் படிப்பின் முதல் பகுதியான Previous தேர்வில் தேர்ச்சி பெற்றார். அடுத்து அவர் ‘First Year’ எனப்படும் இரண்டாவது பகுதிக்குள் நுழையவேண்டும்.
ஆனால், கோகலே படித்த ராஜாராம் கல்லூரியில் அப்போது Previous படிப்பு மட்டும்தான் வழங்கப்பட்டது. அதனால், கோகலே வேறொரு கல்லூரிக்கு மாறவேண்டியிருந்தது.
இம்முறை கோகலே புணேவிலுள்ள டெக்கான் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார். அவரோடு ராஜாராம் கல்லூரியில் படித்த வேறு சில நண்பர்களும் இதே கல்லூரியில் BA First Year படிக்கச் சேர்ந்தார்கள். அதனால், கோகலேவுக்கு ஒரு புதிய நகரத்தில் குடியேறுகிற பதற்றம் சற்றுக் குறைந்திருக்கும்.
பின்னாட்களில் புணே நகரம் கோகலேவின் சொந்த ஊராகவே மாறிவிட்டது. ஆனால், 1883ல் அவர் சில மாதங்கள்தான் புணேவில் தங்கினார். அதற்குள் ராஜாராம் கல்லூரியில் BA First Year படிப்பு தொடங்கப்பட்டுவிட்டது. அதனால், அவரும் அவருடைய நண்பர்களும் தங்களுடைய பழைய கல்லூரிக்கே திரும்பிவிட்டார்கள்.










Add Comment