53. விடைபெற்ற பற்றுக்கோடுகள்
கோகலே பம்பாய்ச் சட்டப் பேரவை உறுப்பினராகிச் சில மாதங்களுக்குப்பிறகு, 1900 அக்டோபர் 18 அன்று அவருக்கு ஒரு மகன் பிறந்தான். ஆனால், அந்தப் பிள்ளை, அவனைப் பெற்ற தாய் ராதாபாய் இருவரும் உயிர் பிழைக்கவில்லை.
ஒருபக்கம் அரசியல், சமூகப் பணிகள், இன்னொருபக்கம் கல்லூரியில் கல்விப் பணி, அவ்வப்போது வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் என்று எந்நேரமும் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்த கோகலேவுக்குத் தன் வீட்டைக் கவனிக்க நேரம் இருக்கவில்லை. அந்தப் பொறுப்பை ராதாபாய் ஏற்றுக்கொண்டு சிறப்பாகச் செய்ததால்தான் அவர் எந்தக் கவலையுமின்றி ஊர் வேலைகளைச் செய்யமுடிந்தது.
கோகலே வெளிப்படையாக இதைப்பற்றிப் பேசவில்லை என்றாலும், மற்றவர்களுடைய பதிவுகளிலிருந்து அவர் ஓர் அன்பான கணவராக, பாசமுள்ள தந்தையாகத்தான் வெளிப்படுகிறார். ஆனால், அன்றைய இந்திய ஆண்கள் பெரும்பாலும் தங்கள் அன்பை வெளிக்காட்டுகிறவர்களாக இருக்கவில்லை. கோகலேவும் அதே அச்சில் வார்க்கப்பட்டவர்தான். அத்துடன், குடும்பத்தைவிட நாடு முதன்மையானது என்று அவர் எப்போதோ தீர்மானித்துவிட்டதால், அவரால் அவர்களுக்காக அதிக நேரத்தைக் கொடுக்க இயலவில்லை.










Add Comment