57. அஞ்சல் வழிக் கல்வி
கோகலே அரசியலுக்குப் புதியவராக இருந்தபோது முதலில் ஆகர்கரும், பின்னர் ரானடேவும் அவருக்குச் சரியான தொடர்புகள், வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுத்து உதவினார்கள், பலரிடம் கோகலேவைப்பற்றிப் பேசி அறிமுகப்படுத்தினார்கள். இந்தத் தொடர்புகளையெல்லாம் கோகலே நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறினார்.
இப்போது, கோகலே அரசியலில் ஆழமாக வேரூன்றியிருந்தார். ஆனால், காந்தி இந்திய அரசியலுக்குப் புதியவராக இருந்தார். அதனால், முன்பு ஆகர்கரும், ரானடேவும், தன்மீது அன்பு கொண்ட மற்ற பெரியோர்களும் தனக்குச் செய்த உதவிகளையெல்லாம் கோகலே காந்திக்குச் செய்யலானார்.
1901 காங்கிரஸுக்குப்பிறகு கொல்கத்தாவில் காந்தி கோகலேவுடன் தங்கியிருந்தபோது, பல பெரிய மனிதர்கள், தலைவர்கள் கோகலேவைப் பார்க்க வந்தார்கள். கோகலே அவர்களுக்கெல்லாம் காந்தியை அறிமுகப்படுத்தி, அவரைப்பற்றி நன்றாகப் புகழ்ந்து பேசினார். வருங்காலத்தில் காந்தி இந்திய அரசியலில் முழுமூச்சுடன் ஈடுபடும்போது இந்தத் தொடர்புகள் அவருக்கு உதவியாக இருக்கும் என்று கோகலே நம்பினார்.










Add Comment