59. துணிச்சலும் திறமையும்
ஒருவனிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. ஆனால், அவனுடைய வீட்டிலிருக்கும் மனைவி, பிள்ளைகள், மற்ற உறவினர்களெல்லாம் பட்டினியில் வாடுகிறார்கள். அப்படியானால், அவனை ஊர் புகழ்ந்து பேசுமா அல்லது காறி உமிழுமா?
பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கையைப்பற்றிக் கோகலே முன்வைத்த விமர்சனமும் இப்படிப்பட்டதுதான், ‘உங்களிடம் இவ்வளவு பணம் கூடுதலாக இருக்கிறது என்று பெருமையுடன் சொல்கிறீர்கள். ஆனால், இதுதான் உண்மையான வளத்தின் அடையாளமா? ஓர் அரசாங்கத்தால் தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு தன் நாட்டிலுள்ள ஏழைகள் படுகிற துன்பங்களையெல்லாம் துடைக்கமுடியவில்லை என்றால், அந்தப் பணத்தால் என்ன பயன்?’ என்று அவர் நேரடியாகக் கேட்டார்.
அடுத்து, இந்தப் பணம் யாரிடமிருந்து வந்தது? அதே ஏழை மக்களிடமிருந்து பலவிதங்களில் வரியாகப் பெறப்பட்ட பணம்தானே இது? அவர்கள் இரண்டு வேளைச் சாப்பாட்டுக்கோ, துணிமணிக்கோ, தங்குமிடத்துக்கோ, படிப்புக்கோ செலவு செய்ய இயலாமல் தடுமாறும்போது நீங்கள் அவர்களிடமிருந்து இவ்வளவு பணத்தை வரியாகப் பெற்று உங்கள் களஞ்சியத்தில் குவித்துவைப்பது நியாயமா? நாடு துன்பத்தில் இருக்கும்போது ஒரு நல்ல அரசாங்கம் தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொடுத்து உதவும்; சுமாரான அரசாங்கம்கூட மக்களுடைய வரிச்சுமையைக் குறைத்து உதவும்; ஆனால் நீங்களோ யார் எப்படித் துன்பப்பட்டாலும், நாட்டில் பஞ்சமோ வறட்சியோ வந்தாலும், விளைச்சல் சரியாக இல்லாவிட்டாலும் மக்கள் உங்களுக்குச் செலுத்தவேண்டிய வரியை முழுமையாகச் செலுத்திவிடவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள்; ஆண்டுக்கு ஆண்டு வரிச்சுமையைக் கூட்டுகிறீர்கள்; அப்படித் திரட்டிய பணத்தையெல்லாம் நிதி நிலை அறிக்கையில் கணக்குக் காட்டிப் பெருமைப்படுகிறீர்கள். உண்மையில் இந்த அரசாங்கம் இந்திய மக்களுக்கானதுதானா?










Add Comment