நேபாளப் பிரதமராக 2025ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை பதவி வகித்தவர் கே.பி. சர்மா ஒலி. அன்றைக்கு அவருடைய பக்தாபூர் இல்லம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. வீட்டுக்கு தீ வைத்த இளைஞர்களில் சிலர் அந்த வீடு இருந்த தெருவில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு, அனைத்துச் சமூக வலைத்தளங்களையும் ஏழு நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என நேபாள அரசு ஆகஸ்ட் மாத இறுதியில் உத்தரவிட்டது. காலக்கெடு முடிந்தும் பதிவுசெய்யாத சமூக வலைத்தளங்களை செப்டம்பர் 5ஆம் தேதி முடக்கியது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப், யூடியூப், எக்ஸ், லிங்க்ட் இன் உள்ளிட்ட 26 தளங்கள் இதில் அடக்கம்.
இந்தத் தடைக்கு முன்பு ‘நெப்போ பேபி’, ‘நெப்போ கிட்ஸ்’ என்ற பெயரில் நேபாள அரசியல்வாதிகளின் வாரிசுகளுடைய ஆடம்பர வாழ்க்கையை விமர்சித்துப் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தன. அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் பேசுபொருளாக இருந்தன. சமூக ஊடகங்களில் இவை தொடர்ந்து பரவாமல் தடுக்கவே சர்மா ஒலி தலைமையிலான அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகத் தகவல்கள் பரவின.














Add Comment