நினைவுக் கொல்லி
முகமது பின் ரஷீத் நூலகத்தின் கீழ்த்தளக் காபி ஷாப்பில் ஒரு மூலையில் இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். தேக்கு நிறமும், மெலிந்து உயர்ந்த உருவமும் கொண்டிருந்தான். கருங்காபியை வாங்கிக் கொண்டு நானும் அதே மேஜையில் அவன் எதிரில் அமர்ந்தேன்.
இருவரும் சின்ன புன்னகையுடன் அறிமுகம் செய்து கொண்டோம். அவன் பெயர் ஒஸ்மான். சூடானின் தலைநகரமான கார்ட்டூமில் இருந்து சமீபத்தில் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவன். தற்போது ஒரு சிறிய நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்கிறான்.
‘சூடான்’, எனக்குப் பெயர் அளவில் மட்டுமே பரிச்சயம். கார்ட்டூம் என்ற ஊரைப் பற்றியோ, அங்கிருக்கும் மக்களைப் பற்றியோ எதுவும் தெரியாது. அவனிடம் சிறிது நேரம் உரையாடினேன். ஒஸ்மானும் தயக்கமின்றிப் பேச ஆரம்பித்தான்.
ஆப்பிரிக்காவின் வடகிழக்கில் அமைந்திருக்கிறது சூடான். எத்தியோப்பியாவிலிருந்து வரும் நீல நைல் நதியும், மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வரும் வெள்ளை நைல் நதியும் தலைநகர் கார்ட்டூமில் (Khartoum) ஒன்றாகச் சங்கமிக்கின்றன. இந்த நதிகளின் சங்கமத்துக்கு நேரெதிரே, நைல் நதியின் மேற்குக் கரையில் ஓம்துர்மான் (Omdurman) நகரம் அமைந்துள்ளது. பாலங்களால் இணைக்கப்பட்ட இந்த நகரங்கள் சூடானின் முக்கியமான வர்த்தக மற்றும் கலாசார மையங்கள் என்று சூடானைப் பற்றிய சிறிய அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு மக்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.










Add Comment