28. நஞ்சு
நக்கன் அருட்படையார் வீதியிலிருந்து மேற்காகக் கீழ்க்கோட்டத்தைச் சென்றடையும் பாதையில் நான்கு ஒதிய மரங்கள் உண்டு. அவற்றுள் உயரம் குறைந்து, அடர்த்தி மிகுந்த மரத்தின் கீழ்க்கிளைகளுள் ஒன்றன்மீது காளத்தி காத்திருந்தான். அவன் அணிந்திருந்த சர்ப்பத்தின் வண்ணம், அடர்ச் சாம்பரில் அஞ்சனம் தெளித்தாற்போல அம்மரத்தின் கிளைகள் கொண்டிருந்த வண்ணத்தோடு கலந்து மறைந்திருந்தது. கவனமாகத்தான் இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான்.
விடிந்து ஆறு நாழிகை கழிந்தபோதே அவன் அவ்விடத்தை வந்தடைந்திருந்தான். அப்படி முன்கூட்டியே சென்றுவிடும்படி உதுமானி நாயனார் அவனுக்குச் சொன்னதை அவன் சிந்தைக்குள் நான் வந்து சேர்ந்தபோதே அறிந்திருந்தேன். எனக்கு ஒரு சிறிய ஆர்வம் உண்டாகியிருந்தது. சார்வாகனைக் கொல்வது நோக்கமல்ல என்று நாயனார் தமது மாணாக்கர்களுக்குச் சொல்லியிருந்தார். சார்வாகனை மட்டுமல்ல. எந்த உயிரையும் பறிக்கும் அருகதை மனித குலத்தில் யாருக்குமில்லை என்று அவர் சொன்னார்.










Add Comment