2. பசித்தவன்
அவனை மட்டும்தான் கவனித்துக்கொண்டிருந்தேன்.
விசையுடன் சாடிப் பெய்துகொண்டிருந்த மழையைச் சற்றும் பொருட்படுத்தாமல் நதிக்கரையோரம் கிடந்தான். அவன் மழையை ரசிக்கவில்லை. அதன் குளிர்ச்சியையோ ஆவேசத்தையோ அனுபவிப்பவனாகவும் தென்படவில்லை. அவன் இருந்தான். அது வந்தது. எனவே அதுவும் இருக்கட்டும் என்பது போலக் கிடந்தான். எப்படி வராகங்களைத் தன்னுடன் வரவும் இருக்கவும் அனுமதித்தானோ அப்படி. வெயிலையும் மழையையும் காற்றையும் கனலையும் இருளையும் ஒளியையும் உயிரினங்கள் அனைத்தையும் ஒன்றாக நோக்கும் பக்குவம் வாய்க்கப் பெற்றவனாகவும் அவன் தெரியவில்லை. எதையாவது சிந்தித்தானென்றால் இன்னும் சற்று நெருக்கமாக அவனைத் தெரிந்துகொள்வேன். அவன் அதையும் செய்யவில்லை. இடுப்பில் முடிந்திருந்த குளிகைகள் மழையில் கரைந்து வீணாகிவிட்டது குறித்துச் சிறிது கவலைப்பட்டான். பிறகு அதையும் விடுத்து, எழுந்து அமர்ந்து சோம்பல் முறித்தான். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டான். இம்முறை அவன் வலப்புறம் திரும்பிப் படுத்துத் தலைக்கு அடியில் வலக்கரத்தை மடக்கி வைத்துக்கொண்டான். அவனது முதுகிலும் பின்னந்தலையிலும் சேறும் நீரும் கலந்து கரைந்து ஒழுகின.
இப்போது இடிச் சத்தம் பலமாகக் கேட்டது. இரு வேறு மின்னல்கள் ஒன்றாக ஒளிர்ந்து மோதி விழுந்தன. அவன் முகத்தை மட்டும் அழுத்தித் துடைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். இம்மழையில் ஒருவன் உறங்க நினைக்கிறான் என்பது வினோதமாக இருந்தது. அதுவே அவனைவிட்டு என் கவனம் அகலாமல் நிலைநிறுத்தியது.










Add Comment