3. வெறும் வெளி
இது என்ன விளையாட்டென்று தெரியவில்லை. யார் ஆடும் ஆட்டமென்று விளங்கவில்லை. தோன்றாத ஒரு சொல்லால் எல்லை மீற இயலுமா. புரியவில்லை. ஆனால் நான் பதற்றமடைகிறேன். தடுமாறுகிறேன். குழப்பமுறுகிறேன். இதெல்லாம் முன்னர் நிகழ்ந்ததில்லை. எந்தச் சங்கேதமும் இல்லாமல் ஏதேதோ நிகழ்கிறது. எனக்குத் தெரியும், புனிதமென்று ஏதுமில்லை. ஆனால் சில தரக் கட்டுப்பாடுகள் காப்பாற்றப்படுகிறவரை எதுவும் அதன் அச்சினின்று விலகாது சுழலும். என் அர்த்தத்தைப் போல. அதை யாரும் அறியாதிருப்பதைப் போல. அறிந்த மூலப் பொருளின் அமைதியைப் போல.
ஆனால் அவன் மீண்டும் என்னைத் தன் சிந்தையில் கண்டான். இம்முறை அவன் லாகிரி மயக்கத்தில் இல்லாதிருந்ததால் விநாடிப் பொழுது பரபரப்படைந்து எட்டிப் பிடிக்கவும் பார்த்தான். அது நடக்கவில்லை; நடக்க வாய்ப்புமில்லை என்பதை அறிவேன். ஆயினும் அவன் என் ஆர்வத்தின் ஊற்றுக் கண்ணைப் பெயர்த்தெடுத்துவிட்டான். இனி ஒரு பெருங்கடலாக நான் பொங்கிப் பொழிவதுவே நியதியானால் ஒன்றும் செய்வதற்கில்லை. இந்த யுகம் முடிய இன்னும் நெடுங்காலம் இருக்கிறது. இப்போது இது நிகழ என்ன தேவையென்று விளங்கவில்லை. எல்லாம் எல்லோருக்கும் புரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லைதான். என் பதற்றமே எனக்குப் புதிதாக இருந்தது. எல்லாம் புதிதுதான். கலித்தாண்டவமென இதையன்றி இன்னொன்றைச் சொல்ல முடியாது.
நல்லது. எவனோ ஒருவன். வெறும் மனிதன். அவனது சிந்தையில் நான் தென்படுகிறேன். என்றால், ஒரு பேரழிவுத் திட்டம் அவனது இருப்பின் சாரமாக இருக்க வேண்டும்.










Add Comment