67. தலைவர், முதல் உறுப்பினர்
1905ம் ஆண்டு ஜூன் 12 அன்று, இந்திய ஊழியர் சங்கம் முறைப்படி தொடங்கப்பட்டது. இதைத் தொடங்கிவைத்தவர், கோகலேவின் நண்பரும், சார்வஜனிக் சபாவில் அவருடன் இணைந்து பணியாற்றியவருமான சிவராம் ஹரி சாட்டே.
அன்று அதிகாலை நேரத்தில், புணேவில் ஃபெர்குஸ்ஸன் கல்லூரிக்கு அருகிலுள்ள மேட்டுப் பகுதியில் கோகலே, நடேஷ் அப்பாஜி திராவிட், அனந்த விநாயக் பட்டவர்தன், கோபால கிருஷ்ண தேவதர் ஆகியோர் கூடினார்கள். முதலில் கோகலே ஏழு வாக்குறுதிகளை எடுத்துக்கொண்டு இந்திய ஊழியர் சங்கத்தின் முதல் உறுப்பினரானார். அதன்பிறகு, அவர் அந்த வாக்குறுதிகளைப் படிக்க, மற்ற மூன்று பேரும் அதைத் திரும்பச் சொல்லிச் சங்கத்தில் இணைந்தார்கள்.
கோகலேவுடன் இந்திய ஊழியர் சங்கத்தில் இணைந்த மூன்று பேரும் முப்பதுகளில் இருந்த இளைஞர்கள். இவர்கள் ஏற்கெனவே அவருக்கு அறிமுகமானவர்கள்தான், அவருடைய வழிகாட்டுதலின்கீழ் இயங்கிக்கொண்டிருந்தவர்கள்தான். எனினும், இப்போது ஒரு முறையான சங்கம், அதற்கென்று தெளிவான விதிமுறைகள், தங்குமிடம், நூலகம், துல்லியமான செயல்திட்டம் என்று அவர்களுடைய சேவைக்கு ஒரு புதிய அடையாளம் கிடைத்தது, பணிகள் சரியான இலக்குகளை நோக்கி விரைவாக முன்னேறும் என்கிற ஊக்கம் பிறந்தது.










Add Comment