66. ஏழு வாக்குறுதிகள்
இந்திய ஊழியர் சங்கத்தின் தலைமையகம் எங்கு இருக்கும்?
அன்றைய இந்தியாவின் நிர்வாகத் தலைநகரமாகக் கொல்கத்தா இயங்கிவந்தபோதும், விடுதலைப் போராட்டம், அது தொடர்பான பணிகள் எந்தக் குறிப்பிட்ட நகரத்தையும் மையமாகக் கொண்டு அமையவில்லை. காங்கிரஸ் தன்னுடைய மாநாடுகளை இந்தியா முழுக்க வெவ்வேறு நகரங்களில் நடத்திவந்தது. உள்ளூர்க் காங்கிரஸ் கிளைகள் ஆங்காங்கு இயங்கிவந்தன. அத்துடன், ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் பகுதிகளில் வெவ்வேறு அமைப்புகளை உருவாக்கி நடத்திக்கொண்டிருந்தார்கள்.
அந்த மரபின்படி கோகலே இந்திய ஊழியர் சங்கத்தின் தலைமையகத்தைத் தான் நெடுநாட்களாக வாழ்ந்துவந்த புணே நகரத்தில் அமைத்தார். அங்கு இந்தச் சங்கத்துக்காக ஓர் இல்லம் அமைக்கப்படும், அத்துடன், அதன் பணி தொடர்பான ஆய்வுகளுக்காக ஒரு நூலகமும் உருவாக்கப்படும் என்று அறிவித்தார் கோகலே.
இதன் பொருள், உறுப்பினர்கள் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அவர்கள் புணேவுக்கு வந்து தங்கிப் பயிற்சி பெறவேண்டும், மற்ற உறுப்பினர்களுடன் உரையாடிக் கற்றுக்கொள்ளவேண்டும், அங்குள்ள நூலகத்தில் இருக்கும் புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும், சங்கம் தீர்மானிக்கும் பல்வேறு பணிகளில் ஈடுபடவேண்டும்.










Add Comment