சந்திரசேகர் அந்த அரங்கில் நுழைந்த உடனேயே அவன் கண்கள் வலதுபுறம் நோக்கித் திரும்பின. நீண்ட மேஜை. அதன் மேல் மூன்று காலி எவர்சில்வர் பாத்திரங்கள். கொஞ்சம் தேங்காய் சட்னி ஒட்டிக்கொண்டிருந்த பெரிய கண்ணாடிக் கிண்ணம். வெள்ளை வெளேர் என்று இருந்த மேஜை விரிப்பில் அங்கங்கு சாம்பார் திட்டுகளாகக் காய்ந்திருந்தது. மேஜைக்குப் பின்னால் சிவப்பு தலைப்பாகை அணிந்த ஒரு சிப்பந்தி சுவாரசியம் இல்லாமல் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
இம்முறையும் சாப்பாட்டைத் தவறவிட்டிருந்ததை எண்ணி சந்திரசேகர் பெருமூச்சு விட்டான். அவனுடைய செய்தி அறையில் கடைசி நேரத்தில் ஏதோ வேலை. அதை முடித்துக் கிளம்புவதற்குள் நேரமாகிவிட்டது.
சென்று பின் வரிசையில் உட்கார்ந்தான். சலசலப்பு அடங்கியிருந்தது. அன்று ஒரு புரொஃபசர், கர்நாடக சங்கீதம் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகத்தைக் குறித்து உரையாற்ற இருந்தார். அரங்கில் லேசாக காபி, பெர்ஃப்யூம் மணம். ஏசி குளிர்ச்சியாக இருந்தது, ஆனால் குளிரடிக்கவில்லை.















Add Comment