14. மறுஉரு
உருவோ உயிரோ குரலோ, இவை நிகர்த்த வேறு ஏதேனும் ஒன்றோ எனக்கு இருந்திருக்குமானால் என்னவாகியிருப்பேன் என்று சொல்லத் தெரியவில்லை. எதிர்கொள்ள முடியாத தருணங்களின்போது மனிதர்கள் பொங்கிப் பெருகி அணை மீறுவதை இப்போது என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நானொரு தகிக்கும் சொல். தாளாக் குளிர்ச்சியை முதல் முறை அவன் என்னை நெருங்கித் தொட்டறிய முயன்றபோது உணர்ந்தேன். திருமஞ்சனக் குளக்கரையில் நிகழ்ந்ததைக் கண்டபோது தகிப்போ குளிர்ச்சியோ அற்ற, பிரளயத்துக்கு முந்தைய பூரண வெறுமையை விநாடிப் பொழுது அனுபவித்து மீண்டேன்.
நான் கண்ட காட்சிக்கு சாட்சியாகச் சார்வாகன் தடாகத்தின் வட கரையிலேயே இன்னும் அமர்ந்திருந்தான். செயல் இல்லை. சிந்தனையில்லை. யாருமறியாமல் ஒரு சாகசத்தை நிகழ்த்தி முடித்திருந்த பெருமிதமில்லை. பதற்றமோ, பரபரப்போ, கள்ளத்தனம் மறைத்த வேறு பூச்சோ நிச்சயமாக இல்லை. எப்போதும் போல அவன் இருந்தான். புதிதாக எதுவும் நிகழாதது போல இருந்தான். அல்லது நிகழ்ந்ததற்கும் தனக்கும் தொடர்பற்றவனைப் போல.










Add Comment