36. சிவன் சித்தம்
உதுமானி நாயனாரின் சிந்தைக்குள் வசிப்பது ஒரு சரசுவதி பண்டாரத்துக்குள்ளே அமர்ந்து ஏடு வாசிப்பது போல இருக்கலாம் என்று தோன்றியது. அவரது மாணாக்கர்கள் யார் எதை எந்த விதமாகப் பேசினார்களோ, அதை அப்படி அப்படியே அவர் தனது நினைவில் சேமித்து வைத்திருந்தார். அவர்கள் தந்த தகவல்களுக்கு அவர் அளித்த பதில்களையும் சொல் மாற்றமின்றி அடுக்கியிருந்ததைக் கண்டேன். அவராகச் சிந்தித்து வைத்தவற்றின் மொழியும் அவர் தமது மாணாக்கர்களுடன் உரையாடும் மொழியும் முற்றிலும் வேறாக இருந்தது. அவர் சோனகர் மொழியில் சிந்தித்தார். மாணாக்கர்களுடன் தமிழில் அளவளாவினார். தவிர அவருக்குச் சீனம் தெரிந்திருந்தது. பாரசீகம் தெரிந்திருந்தது. ஒரு மனிதனின் சிந்தைக்குள் நானாவித மொழிகளும் மொழிக்கு நூறாயிரம் நினைவுகளும் இருந்தாலும் எல்லா தருணங்களிலும், எல்லா பிராயங்களிலும் அவர் நிதானம் தவறியோ, பதற்றம் மேலோங்கியோ நடந்துகொண்டதன் சுவடில்லை. இது மிகுந்த வியப்பளித்தது. ஞானமடைந்த ஒரு மனிதனின் சிந்தை சமநிலையில் இருக்குமானால் அதில் வியக்க ஏதுமில்லை. ஆனால் பிறந்தது முதற்கொண்டே உதுமானி நாயனார் அப்படித்தான் இருந்தார் என்பதைக் கண்டறிந்தேன்.
அவர் தமது குருநாதரைப் பற்றிய நினைவுகள் அனைத்தையும் பாரசீக மொழியில் சேமித்திருந்தார். பத்து, நூறு, ஆயிரம், பல பத்தாயிரங்களென அடுக்கடுக்காகச் சம்பவங்கள் அதில் கொட்டிக் குவிந்து கிடந்தன. பாரசீக மொழி என்பது எப்பிராந்தியத்தில் பேசப்படுவது என்பதையே அறியாத தனது குருநாதர், ஒரு நாள் ஆறு விநாடிகள் கண் மூடி தியானத்தில் இருந்துவிட்டுப் பிறகு கண் திறந்ததும் அம்மொழியில் துள்ளலோசை கொண்ட கலிப்பா வடிவில் நூற்றெட்டு பாக்கள் இயற்றிப் பாடியது கண்டு அதிசயித்ததை ஐந்துக்கும் மேற்பட்ட முறை உதுமானி நாயனார் நினைவுகூர்ந்திருந்தார்.










Add Comment