உலகின் பழமையான தொழில்களில் ஒன்று உளவு. அடுத்த வீட்டில் நடப்பதை எட்டிப் பார்ப்பது தவறெனக் கற்பிக்கும் மனித நாகரிகத்தின் பெரும்பாலான அரசியல் நகர்வுகளும், போரின் முடிவுகளும் உளவுத் தகவல்களைக் கொண்டே தீர்மானிக்கப்பட்டுள்ளன. மறைமுகப் போரில் அமெரிக்கா சோவியத்தைச் சிதைத்ததற்கும், மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் தனித்துப் பிழைத்திருப்பதற்கும் வலிமையான உளவு அமைப்புகளே காரணம்.உளவின் வடிவத்தைத் தொழில்நுட்ப வளர்ச்சி பெருமளவு மாற்றியுள்ளது. ஆனால் நோக்கம் ஒன்றுதான், எதிரி நாட்டின் தகவல்களைத் திருடுவது.
மறுபக்கம், உலகின் பழமையான உயிர்களில் ஒன்று கரப்பான். 300 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகப் புவி மேலோட்டில் ஊர்ந்துகொண்டிருக்கும் உயிரினம். மனிதனை விட 15 மடங்கு அதிகக் கதிர்வீச்சு எதிர்ப்புத் தன்மை கொண்டது. போரிலோ, பிரளயத்திலோ மற்ற ஜீவராசிகள் மடிந்தாலும் இது பிழைத்திருக்குமெனக் கணிக்கிறார்கள். மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளிலும், வாழ்விடங்களிலும் தாக்குப்பிடிப்பது, கிடைத்ததை உண்பது, ஒரு மாதம் வரை உணவில்லாமலும், ஒரு வாரம் வரை நீரில்லாமலும் வாழ முடிவது போன்றவை மேலும் சில காரணங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் கரப்பானின் இந்தப் பிழைத்திருக்கும் காரணிகளுடன், நவீனத் தொழில்நுட்பத்தை இணைத்து சைபார்க் கரப்பானை (Cyborg Cockroach) உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவது இதன் நோக்கமாகச் சொல்லப்பட்டது. மார்ச் 2025இல் மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மீட்புப் பணிகளில் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட சைபார்க் கரப்பான்கள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. தற்போது இவற்றை உளவு பார்க்கப் பயன்படுத்தப் போவதாகச் சொல்லப்படும் நிலையில், எதிர்காலத்தில் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.














Add Comment