அனுபவமும் ஆனந்தமும்
தில்வாலே துல்ஹனியா படத்தின் வெற்றி ஷாருக்கை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அதோடு அவருடைய சம்பளமும் கணிசமாக உயரத் தொடங்கியது. முதலில் இருந்தே இவரிடம் உள்ள ஒரு பழக்கம், பணத்தைப் பற்றி அவர் பேசாமல் இருந்ததில்லை. ‘நான் எதுவுமே இல்லாமல் இருந்தவன், வளர்ந்தவன். பணத்தின் அருமை எனக்குத் தெரியும். என் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தர வேண்டும் என்று நினைப்பதில் தவறென்ன? நான் தங்க ஸ்பூனோடு பிறந்தவன் அல்ல, அதே சமயம் ஒருவர் நஷ்டப்பட்டு நான் மட்டும் வளர வேண்டும் என்று நினைக்கமாட்டேன்’ என்றார்.
ஆனால் கரன் ஜோஹர், யாஷ் ராஜ் படங்களுக்கு அவர் சம்பளம் பேசுவதில்லை. இது இன்று வரை தொடர்கிறது. சில தயாரிப்பாளர்கள் படத்தை முடிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். அந்தச் சமயங்களில் தன்னுடைய சம்பளத்தை விட்டுக் கொடுத்துப் படத்தை முடிக்க உதவுவார் ஷாருக். சிலருக்கு அவரே பணத்தைக் கொடுத்து முடித்த விஷயங்களும் உண்டு. ஆனால் இது எதுவுமே வெளியில் தெரியாத மாதிரி பார்த்துக் கொள்வார்.
இப்படி அவர் இருந்ததால்தான் மற்ற எந்த நடிகரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பளம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. திரை வட்டாரங்களில் அவருடைய சம்பளமும் வருமானமும் பேசுபொருளாக ஆரம்பித்தன.










Add Comment