சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அலைவோருக்காக அமைக்கப்படுவது, அகதி முகாம். இது உலகெங்கும் உண்டு. பல்வேறு நாடுகள். பல்வேறு காரணங்கள். பல்லாண்டு காலமாக உள்நாட்டுப் போரில் சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியாவில் இல்லாதிருக்குமா?
உண்டு. என்ன ஒரு வித்தியாசம் என்றால் சிரியாவின் வடக்கு எல்லையோரம் அமைந்துள்ள பல அகதி முகாம்களே அகதிகளாகி இருப்பதுதான்.
வடக்கு சிரியாவின் முடிவற்ற பாலை நிலவெளியில் ஏராளமான வெண்நிறக் கூடாரங்கள் வரிசையாக அமைந்திருக்கின்றன. அனல் காற்றும், கொதிக்கும் மணலும் வாட்டியெடுத்தாலும் உயிரை மட்டுமாவது காப்பாற்றிக்கொள்வதற்காக அங்கே தங்கியிருக்கும் அகதிகள் அநேகர். குளிர் காலத்திலோ உதடுகள் வெடித்து, தோல் உறைந்துவிடும். ஏதாவதொரு நாடு கருணை அடிப்படையில் அனுப்பி வைக்கும் போர்வைகளும் பழைய துணிமணிகளுமே அவர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன. மற்றபடி சிரியாவின் அரசு அங்கே அப்படிச் சில முகாம்கள் இருப்பதே தெரியாதது போலத்தான் இருக்கிறது.
ஏன் இந்த முகாம்கள் அரசால் கைவிடப்பட வேண்டும்? காரணம்… இங்கிருப்பவர்கள் எல்லாம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினரின் மனைவி, குழந்தைகள் என்பதுதான். இந்த ஒரு காரணம் போதாதோ அவர்கள் என்னவாக வேண்டும் என்று உலகம் முடிவெடுக்க?















Add Comment