இலங்கை அரசப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில் மட்டுமின்றி, சர்வதேச ரீதியிலும் இவரது கைது பற்றிப் பேசப்படுகிறது. காரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவருக்கும் தொடர்பு உள்ளது என்பதுதான் கைதின் பின்னணி.
சுரேஷ் சலே. இலங்கை ராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகச் செயல்பட்ட ஒருவர். 2016ஆம் ஆண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களின் பின்னணியில் ராணுவப் புலனாய்வுப் பிரிவு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட அழுத்தங்களின் அடிப்படையில் இந்தப் பதவிநீக்கம் மேற்கொள்ளப்பட்டது.
மீண்டும் 2019 டிசம்பரில் புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இலங்கை அரசப் புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டார். அதாவது, போலிஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரிவு இது. 2024இல் ஆட்சிக்கு வந்த அதிபர் அனுர குமார திசாநாயக்க செய்த மிக முக்கியமான களையெடுப்புகளில் இவரும் ஒருவர். 2019இல் இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் இவருக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதே இதற்குக் காரணம்.















Add Comment