தென் ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் அறுபது பேர் அகதிகளாக அமெரிக்காவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அகதிகள் குடியேற்றம் என்பது உலகெங்கும் நடப்பதுதானே, இதிலென்ன வியப்பு என்கிறீர்களா? இரண்டாம் முறை பதவி ஏற்றவுடனேயே அமெரிக்காவில் அகதிகளுக்கு இனி இடமில்லை என்ற உத்தரவில் கையொப்பம் இட்டிருந்தார் டிரம்ப். இங்கே கவனிக்கப்பட வேண்டியது இப்போது அகதிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருமே ஆப்பிரிகானர்கள் (Afrikaners) எனப்படும் வெள்ளை இனத் தென் ஆப்பிரிக்கக் குடிமக்கள்.
யாரிந்த ஆப்பிரிக்கானர்கள்? அவர்கள் 17ஆம் நூற்றாண்டில் தென் ஆப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக்காரர்களின் வழித்தோன்றல்கள். மிகப் பெரும்பான்மையானோர் டச்சு என்றாலும் மிகக் குறைந்த அளவில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மானிய கலப்பும் கொண்டவர்கள். இவர்களைத் தவிர (ஆங்கிலேயர் போன்ற) பிற ஐரோப்பியச் சந்ததியினர் ஆப்பிரிக்கானர் அல்லர். அதாவது டச்சு காலனியாதிக்கம் தென் ஆப்பிரிக்காவில் விட்டுச் சென்ற எச்சமே ஆப்பிரிக்கானர் என்ற இனக்குழு. இன்று சுமார் மூன்று கோடி பேர் அங்கே இருக்கின்றனர். இது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 3.5 விழுக்காடு.
இன்று உலகெங்கிலும் பன்னிரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருவதாக ஒரு தரவு சொல்கின்றது. 1975ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க மண்ணில் சுமார் மூன்று கோடி அகதிகள் குடியேறியுள்ளனர்.













Add Comment