40. இவனும் அவனும்
நீங்கள் என்னை ஓங்கி அடிக்கவில்லை. ஆயினும் தலை நோவு கொள்ளச் செய்கிறீர்கள். முதல் முறையல்ல. இது மறுமுறை,
என்று பாரதாய தத்தன் சொன்னான். அந்தத் தருணத்தை நான் நெடுநேரமாக எதிர்நோக்கியிருந்தேன். தஞ்சப்புரியை நோக்கிய பயணத்தில் எந்தப் புள்ளியில் சார்வாகன், தத்தனை நோக்கி அந்தப் பேச்சையெடுப்பான் என்று காத்திருந்தேன். நானறிவேன், தத்தன் கேட்டதும் சற்றும் சிந்திக்காமல் அவன் உடன் வர ஒப்புக்கொண்டதற்கே அதுதான் காரணம். ஆதுர சாலையில் அவன் கண் விழித்தெழுந்தபோது அங்கிருந்த வைத்தியர்களும் பிறரும் தீரா வியப்புடன் தமக்குள் பேசிக்கொண்டதெல்லாம் அவன் பிழைத்தெழுந்தது பற்றியல்ல. சிகிச்சை முடியும் வரை தத்தன் அங்கே இருந்ததும், சார்வாகன் பிழைத்தெழுவதற்காக அவன் பிரார்த்தனை செய்ததும், நீரெடுத்து அவன் நெற்றியில் வைத்ததும் அவர்கள் முற்றிலும் எதிர்பாராதவை. உன் தந்தைக்குத் தெரிந்தால் சீற்றம் கொள்வார் என்று சொன்ன பின்பும் அவன் உறுதியாக அங்கேயே நின்றதும் செய்ததும் அவர்களுக்கு மிகவும் வினோதமாக இருந்தது.










Add Comment