ஏரிகளுக்கும் படகு வீடுகளுக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு வறட்சியை எதிர்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, அரசின் நீர் மேலாண்மைத் துறையான ஜல் ஷக்தி எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் மக்களும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
திடீரென நீர் நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை காஷ்மீர். பத்தாண்டுகளாகவே சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மழையும் பனிப்பொழிவும் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகின்றன. இந்த ஆண்டு குளிர்காலத்தில் எண்பது சதவிகிதம் மழை குறைந்துள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி நடக்க இருந்த கேல் இந்தியா எனப்படும் பனி விளையாட்டுகள் நிகழ்ச்சி பனி இல்லாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெயில் காலம் முன்னதாகவே வந்துவிட்டது போல் இருப்பதாகச் சொல்கிறார்கள் உள்ளூர்வாசிகள். வழக்கத்தைவிடச் சுமார் எட்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது.
குளிர்ச்சியாக இருக்கும் மலைகளில் நீர்ப் பற்றாக்குறை இருக்காது என நம்மில் பலர் நினைக்கக்கூடும். லாஜிக்கலாக யோசித்தால் புவியீர்ப்பு விசையால் கீழே போகும் நீரை மலைகளில் சேமித்துவைப்பது எளிதல்ல என்று புரியும். படிகளைப்போல பாத்திகட்டி விவசாயம் செய்வதே இப்பகுதிகளில் சாவாலான விஷயம். ஆங்காங்கே இருக்கும் சமவெளி, பள்ளத்தாக்கு போன்ற வாய்ப்புள்ள இடங்களில் உள்ள ஏரிகளும், நீர்ச்சுனைகளும் தவிர காஷ்மீர் நீர்த் தேவையைப் பெரிதும் பூர்த்தி செய்வன ஆறுகள்தாம்.
Add Comment