மலைப்பிரதேசங்களின் காலை நேரங்கள் ரம்யமானவை. கோடைக்காலத்திலும் மிதமான குளிர் உடலுக்குள் ஊடுருவி எலும்புகளைத் தீண்டும். அதே நேரம் வெயில் சருமத்தைச் சுடும். பச்சை நிறப் போர்வையை விரித்தது போன்ற சுற்றியுள்ள இயற்கை எழில் கண்களை நிறைக்கும். மலைப் பிரதேசங்களில் வாழும் பரபரப்பில்லாத மனிதர்கள் பொறாமைப்பட வைப்பார்கள். சாதாரண மலைகளே இத்தனை அழகான சூழலைக் கொடுக்கின்றன. இரண்டு பில்லியன் ஆண்டுகள் வயதுள்ள, எழுநூறு கிலோமீட்டர் நீளமான இயற்கை செதுக்கிய ஆரவல்லி மலைத்தொடரைப் பற்றிச் சொல்ல அவசியமில்லை.
ஆரவல்லி, உலகின் பழைமையான மலைத்தொடர்களில் ஒன்று. குஜராத்தில் தொடங்கி ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்கள் வழியாக டெல்லி வரை ஆரவல்லி மலைகள் விரிந்துள்ளன. இந்த மலைத்தொடர் வட இந்தியாவின் பாதுகாப்பு அரணாகவும் உள்ளது. இது பாலைவனப் பரவலைத் தடுத்து, நிலத்தடி நீரைச் சேமிக்க உதவுகிறது. காற்றில் அடித்து வரப்படும் தூசிகளுக்குத் தடுப்பு அரணாக இருக்கிறது. டெல்லியின் காற்று மாசுபாடு நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் தூசிகள் பரவினால் டெல்லி சுற்றுச்சூழல் மோசமாகி அது வாழத் தகுதியில்லாத நகரமாகிவிடும். இவ்வளவு நன்மைகளைச் செய்யும் ஆரவல்லி மலைத்தொடரின் எதிர்காலம் இப்போது உச்ச நீதிமன்றத்தின் ஓர் உத்தரவால் கேள்விக்குறியாகியுள்ளது.















Add Comment