ஆர்ப்பாட்டங்களால், புரட்சிகளால், கலவரங்களால் வீழ்ந்த ஆட்சிகள் உலக சரித்திரத்தில் ஏராளம் தாராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அமைதியான பாதயாத்திரைகூட, ஒரு எதேச்சாதிகார அரசின் அஸ்திவாரத்தைப் பொலபொலக்க வைத்துவிடும் என்பதற்கு இலங்கையைத் தவிர வேறு நல்ல உதாரணம் கிடையாது.
பலஸ்தீனத்தில் நடந்த இண்டிஃபாதா போன்ற ஒன்று 1992 ஆகஸ்டில் இலங்கையில் நடந்தது. கொழும்பில் இருந்து தெற்கே இருநூற்று எழுபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த கதிர்காமத்திற்குப் பாதயாத்திரை செல்லத் திட்டமிட்டார் மகிந்த ராஜபக்சே.
‘‘பாராளுமன்ற வரப்பிரசாதங்களை உபயோகித்துக் கொண்டு பாதுகாப்பான அறைகளிலும், எதிர்க்கட்சி அலுவலகங்களிலும் நாம் இந்தப் படுபாதக ஆட்சிக்கு எதிராய்க் குரல் கொடுப்பதால் யாதொரு பலனுமில்லை. ஜே.வி கலவரங்களை அடக்கப் போய் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்று குவித்து இருக்கிறார் பிரேமதாஸ. இப்போது ஜே.வி.பி இல்லை. ஆனால் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள், ஆட்கடத்தல்கள், ஜனநாயகவாதிகளின் குரல்வளை நெரிப்புக்கள், மாற்றுக் கருத்துக் கொண்டோர் மீதான படுகொலைகள் என்று எதுவும் குறைந்தபாடில்லை. பொதுமக்களுக்கு இந்த ஆட்சி மீது மிக மோசமான வெறுப்பு இருக்கிறது. அவர்களின் நாடித்துடிப்பைப் புரிந்து கொள்ளப் பாதயாத்திரையைப் போன்ற அருமருந்து வேறில்லை” என்று சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சீறினார் மகிந்த ராஜபக்சே.















Add Comment