20. எருமை போல் வாழ்வோம்
எருமை என்று ஒருவரைத் திட்டும் போது நாம் அவரை இகழ்வாகச் சொல்வதாக நினைக்கிறோம். ஆனாலும் எருமையின் குணாதிசயங்களை அவதானித்துப் பார்த்தால் அவற்றில் பலவும் நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உதவுபவையாக இருப்பதைக் காணலாம். நாம் இதுவரை பார்த்த நமக்குப் பலன் தரக்கூடிய எருமையின் முக்கியமான குணாதிசயங்களைச் சுருக்கமாக இந்த இறுதி அத்தியாயத்தில் பார்ப்போம்.
1. உணர்ச்சி வசப்படாதிருத்தல்
எருமையில் தோல் மிகவும் தடிமனானது. பொதுவாக இதனை வைத்தே எருமை என்று திட்டும் போது மானம், ரோசம் போன்ற உணர்ச்சிகளற்றவர் எனும் அர்த்தத்தில் திட்டுகிறார்கள். ஆனாலும் சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாவற்றுக்கும் உணர்ச்சி வசப்படுவதுதான் ஒருவரின் வாழ்வில் பல சிக்கல்களை உருவாக்கும். சாதாரண விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படாது சிந்தித்துச் செயல்படும் திறன் நமக்கு மிகவும் பயனுள்ள திறனாகும். ஆகவே உங்களை ஒருவர் எருமை என்று திட்டினால் நீங்கள் உண்மையில் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
உங்கள் மகிழ்ச்சியினைப் பாதிக்கும் சந்தர்ப்பங்களைக் கவனித்துப் பாருங்கள். அவற்றில் அதிகமானவை மற்றவர்கள் நடந்து கொள்ளும் முறை அல்லது மற்றவர்கள் நமது மனத்தினைப் பாதிக்குமளவு பயன்படுத்தும் சொற்கள் உங்கள் மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாக இருந்திருக்கும். உடல் நலம் போன்ற வேறு புறக் காரணிகள் இருந்தாலும் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.
Add Comment