M23. ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் துவம்சம் செய்து கொண்டிருக்கும் ஆயுதப் போராட்டக் குழுவின் பெயர் இது. இந்த ஜூலையில் மட்டும் சுமார் 319 பேரைக் கொன்று குவித்துள்ளது. கொல்லப்பட்ட அனைவரும் பொதுமக்கள். பெரும்பாலானோர் விவசாயக் கூலிகள். இதில் 48 பெண்களும், 19 குழந்தைகளும் அடக்கம்.
இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து சுமார் ஏழாயிரம் அப்பாவி மக்கள் M23இன் அட்டூழியங்களுக்கு இரையாகியுள்ளனர். கடந்த சில வருடங்களாகவே சட்டவிரோதக் கொலைகள், பெண்கள் வன்புணர்வு, சிறுவர்களையும் ஆயுதம் ஏந்தச் செய்வது போன்ற வெளிப்படையான போர்க்குற்றங்களை எவ்விதத் தயக்கமுமின்றி நிகழ்த்தி வரும் இவர்கள் யார்? இவர்களின் பின்னணி என்ன?
M23ஐப் பற்றித் தெரிந்து கொள்ள, நாம் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மத்தியில் இருக்கும் இரு நாடுகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். ஒன்று Democratic Republic of Congo. சுருக்கமாக DRC அல்லது காங்கோ. மற்றொன்று ருவாண்டா. காங்கோ, ஆப்பிரிக்கக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு (ஆப்பிரிக்காவில் Republic of Congo என்று மற்றொரு நாடும் இருக்கிறது). காங்கோவின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள ஒரு மிகச் சிறிய நாடுதான் ருவாண்டா. எவ்வளவு சிறியதென்றால், ருவாண்டாவைவிட காங்கோ 89 மடங்கு பெரியது. இவ்விரு நாடுகளுக்கிடையே நிலவிவரும் பகைதான் அப்பாவி மக்களைப் பலிகடாக்களாக ஆக்கியுள்ளது.















Add Comment