இந்திய மகளிர் அணிகளுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருந்துள்ளது. சமீப நாட்களில் பெண்களுக்கான இந்திய விளையாட்டு அணிகள் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டிருக்கின்றன. இந்த வெற்றிகள், விளையாட்டில் மட்டுமல்லாது பிற துறைகளில் செயலாற்றும் பெண்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கும்.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் மூன்றாம் வாரத்தில் இலங்கையில் நிறைவடைந்தன. இறுதிப்போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி, இத்தொடரின் அனைத்துப் போட்டிகளையும் அபாரமாக வென்றது.
பங்களாதேஷில் நடைபெற்ற மகளிருக்கான கபடி உலகக் கோப்பையையும் இந்திய அணி வென்றிருக்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாமல் இறுதிப் போட்டிவரை முன்னேறி சாம்பியனானது.
சில வாரங்களுக்கு முன் மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையிலும் இந்தியா மகுடம் தரித்தது. இந்நிகழ்வை மொத்த தேசமும் கொண்டாடித் தீர்த்தது. தொடரின் ஆரம்பத்தில் தடுமாறினாலும், நாக் அவுட் போட்டிகளில் அசத்தலாக ஆடியது இந்திய அணி. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசாதாரணமான சேஸை செய்தது. இறுதிப் போட்டியில் பலமிக்க தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை ஏந்தியது.















Add Comment