‘இரானின் தாக்குதல்களைத் தடுக்க பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளில் இருந்து எண்ணூறுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. மத்தியக் கிழக்குப் போர் தொடங்கிய மூன்று நாள்களுக்குள் இவ்வளவு ஏவுகணைகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. நான்கு வருடங்களாக நடக்கும் உக்ரைன் போரில் கூட மொத்தமாக நாங்கள் இவ்வளவு ஏவுகணைகளை உபயோகித்ததில்லை. எங்களிடம் இவ்வளவு இருந்ததும் இல்லை.’
இதைக் கூறியிருப்பவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. மத்தியக் கிழக்கில் நடக்கும் போரால் உக்ரைன் போர் எவ்வளவு பாதிக்கப்படப் போகிறது என்பதை விளக்கும் வாக்குமூலம் இது. இரானிடமிருந்து இஸ்ரேலைப் பாதுகாக்க மட்டுமே எல்லாவற்றையும் செலவிட்டு முடித்துவிடாதீர்கள். எங்களுக்கும் மிச்சம் வையுங்கள் என்பது முதல் உண்மை.
அடுத்தது, ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க பேட்ரியாட் ஏவுகணைகளே வேண்டும் என்பது அவசியமில்லை. அவை ஒவ்வொன்றும் நான்கு மில்லியன் டாலர் மதிப்புள்ளவை. இரானின் ஷாஹீத் தற்கொலை ட்ரோன்களை முறியடிக்க உக்ரைனின் இடைமறிக்கும் ட்ரோன்களே போதுமானவை. அவை எவ்வளவு தேவை, எப்படிச் செயல்படும் என்பதை நாங்கள் சொல்லித் தருகிறோம். போரில் இப்போது உங்களுக்கு மூத்தவர்கள் நாங்கள். பதிலுக்கு உங்கள் பேட்ரியாட் ஏவுகணைகளில் சிலவற்றை எங்களுக்குத் தாருங்கள் என்கிறார் ஜெலன்ஸ்கி.















Add Comment