ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள உயர் அடுக்குமாடிக் கட்டடங்களில் நவம்பர் 26ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. கடந்த நூறு ஆண்டுகளில் அங்கு நடந்த பெரிய விபத்து இது. அதில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
முப்பதுக்கும் மேற்பட்ட தளங்களுடன் ஏழு பெரிய கட்டடங்களைக் கொண்ட பகுதி வாங் பேக் கோர்ட் காம்ப்ளெக்ஸ். 1983ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பில் சுமார் நான்காயிரம் மக்கள் வசித்துவந்தனர். புனரமைப்புப் பணிகளுக்காக அக்கட்டடங்களைச் சுற்றி மூங்கில் கம்புகள் கட்டப்பட்டிருந்தன. அதோடு பணிகள் நடைபெறும்போது கட்டடங்களை மூடப் போடப்படும் நெகிழியால் ஆன பச்சை வலையையும் போர்த்தியிருந்தனர். இவை இரண்டுமே எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை, தீயை வேகமாகப் பரவச் செய்பவை.
தீ விபத்து ஏற்பட்ட அன்று மதியம், நெகிழி வலைகள் தீயில் எரிந்ததில் உண்டான பெரும்புகை விரைவாக மேல்தளங்களுக்குப் பரவியதால் அங்கிருந்து மக்களை வெளியேற்றுவது கடினமாகிப் போனது. 2021 சென்சஸ் பதிவின்படி அங்கே வசித்தவர்களில் நாற்பது சதவிகிதம் பேர் அறுபத்தைந்து வயதுக்கும் மேற்பட்டோர். புனரமைப்புப் பணிக் குழுவினரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிந்தாலும், முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.















Add Comment