86. பனிப்போர்
தூதாபாய் குடும்பத்தை ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்வது என்று காந்தி தீர்மானித்தது அவருடைய ஆசிரமத்திலிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அதே நாளில் (செப்டம்பர் 11) வெவ்வேறுவிதமாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினார்கள்.
காந்தியின் இந்தத் தீர்மானத்தைக் கஸ்தூரிபா வெளிப்படையாக எதிர்த்துப் பேசினார், கோபத்துடன் வாதாடினார். மகன்லாலின் மனைவி சந்தோக்-கும் அவருடன் இணைந்துகொண்டார், ‘இதை எதிர்க்கும்விதமாக நான் இன்றைக்குச் சாப்பிடப்போவதில்லை’ என்று அறிவித்தார்.
அப்போது ஆசிரமத்திலிருந்த வ்ரஜ்லால் என்பவர் புகை பிடித்திருந்தார். அதைப்பற்றி விசாரித்தபோது, ‘நான் புகை பிடிக்கவில்லை’ என்று பொய் சொல்லியிருந்தார். இந்த இரட்டைக் குற்றத்தைக் கண்டிக்கும்வகையில் காந்தியும் அன்றைக்குச் சாப்பிடவில்லை.
அடுத்தடுத்த நாட்களில், இந்த நாடகம் இன்னும் தீவிரமடைந்தது. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிலருடன் ஒன்றாக வசிப்பதும் சமைத்துச் சாப்பிடுவதும் கஸ்தூரிபா-வுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவர் மீண்டும் மீண்டும் இதை எதிர்த்துப் பேச, காந்தியின் பொறுமை கரைந்துகொண்டிருந்தது.
Add Comment