ஹைடி
அன்று புதன்கிழமை. நூலகத்தில் மக்கள் அதிகமில்லை. ஒவ்வொரு தளத்திலும் வாசகர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தது. ஆனால் தரைத்தளத்தில் மட்டும் திடீரெனப் பூத்த ஒரு மாயாஜாலத் தோட்டம் போலப் பத்து பதினைந்து பேர் கூடியிருந்தார்கள். அலங்காரப் புத்தகங்களாலான அந்தப் பிரம்மாண்டமான சுவரை அண்ணாந்து பார்த்தபடி எல்லா வயதிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அங்கே குழுமியிருந்தார்கள்.
பொதுவாக நூலகம் என்றாலே நிலவும் அந்த நிசப்தம், அங்கே மட்டும் மெல்லிய சலசலப்பால் உடைந்திருந்தது. ஒவ்வொருவரும் அந்தப் புத்தகச் சுவருக்கு முன்னால் நின்று விதவிதமான பாவனைகளில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். சிலர் அலமாரியிலிருந்து புத்தகத்தை எடுப்பது போலவும், சிலர் சுவருக்கு முன்னால் கைகளை விரித்து நிற்பது போலவும் கேமராவுக்கு முகம் காட்டினார்கள்.
அதில் ஒரு பெண் நின்ற விதம் மட்டும் இப்போது வரை நினைவில் பசுமையாக இருக்கிறது. அவள் ஒருபக்கமாகச் சாய்ந்து நின்று, ஒற்றைக்காலை லேசாக மேலே தூக்கி, இரு கைகளையும் குவித்துத் தன் கன்னங்களுக்குக் கீழே வைத்துக்கொண்டு தலையைச் சாய்த்தாள். ஓர் ஓவியத்தைப் போலத் தெரிந்த அந்த அபிநயம் மற்ற எல்லாவற்றையும் விட வித்தியாசமாக இருந்தது. அங்கிருந்தவர்களின் ஆடைகளும் பேச்சும் அவர்கள் அனைவரும் சுற்றுலாப்பயணிகள் என்பதை உணர்த்தின.









Add Comment