26. விண்ணளந்த புரவி
செங்குடி குதுரவட்டத்து உதுமானி நாயனார் தனது மாணாக்கர்களுடன் வாசம் செய்து வந்த கடிகை எங்குள்ளதென்று என்னால் இனம் காண முடியவில்லை. செங்குடிதான். ஊரைக் கண்டுகொண்டேன். ஆனால் அவரது பாடசாலை இருந்த இடத்தை எந்த வகையிலும் ஊகித்து அறிய இயலவில்லை. அவரது சிந்தைக்குள்தான் இருந்தேன். அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் உடன் சென்றேன். அவர் திரும்பி வந்த வழிகளைக் கவனமாக நினைவில் இருத்திக்கொண்டுதான் இருந்தேன். ஆயினும் அவ்விடத்தின் அமானுடத்தன்மையைத் தகர்க்க இயலவில்லை. எவ்வளவு கூர்ந்து கவனித்து உள்ளிருத்தினாலும் ஏதோ ஒரு புள்ளியில் திசைக் குழப்பம் நேர்ந்துவிடுகிறது.
ஊர் மையத்தினின்று ஒரு கூப்பிடு* தொலைவுமில்லை. ஆயினும் செங்குடியின் மண்ணும் அவரது கடிகை இருந்த இடத்தின் மண்ணும் நிற பேதமெய்திவிடுகின்றன. வளியின் சீதம் மாறுகிறது. வான்வெளியின் நிறம் வேறாகிவிடுகிறது. கருநீலமும் பால் வெண்மையும் அல்லிச் சிவப்புமாக நாழிகைக்கொரு வண்ணம் காட்டும் வான்வெளியை நான் எப்போதுமே கண்டதில்லை. ஒவ்வொரு முறையும் விசும்பின் நிறம் மாற்றம் காணும்போதும் உதுமானி நாயனாரின் கடிகை திசை மாறிப் பொருந்திக்கொள்கிறது. வடக்கே பார்த்த வாயிலென்று முடிவு செய்து வைத்தால், கண்ணுக்குத் தென்படாமல் அது குடதிசைக்குத் திரும்பிவிடுகிறது. இன்னுமொரு நாழிகை கழியும்போது தெற்கில் திரும்பி, பிறகு குணதிசைப் பக்கம் பார்த்து அமர்ந்துவிடுகிறது.











Add Comment